மிக நெருக்கத்தில் வைத்து கெளரி லங்கேஷை 7 முறை சுட்ட கொடூரர்கள்
பெங்களூர்: லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷை சுட்டுக் கொன்ற கொடூரர்கள், அவரை மிக நெருக்கத்தில் வைத்து 7 முறை சுட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் கெளரி. மாலை 6.30 மணியளவில் இக்கொடிய சம்பவம் நடந்துள்ளது. மிகவும் துணிச்சலான பத்திரிகையாளராக அறியப்பட்டவர் கெளரி. அவரை மிகக் கோழைத்தானமாக சுட்டுக் கொன்றுள்ளனர் கொலையாளிகள்.
Recommended Video
வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு கேட்டை திறந்துள்ளார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கெளரியா மிக நெருக்கத்தில் வைத்து சுட்டுள்ளனர். 7 முறை அவர் சுடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
கன்னட பத்திரிகையான லங்கேஷ் பத்திரிகையை நடத்தி வந்தவர் கெளரி. மிகத் தைரியமாக பேசக் கூடியவர், எழுதக் கூடியவர். யாருக்கும் அஞ்சாத துணிச்சல்காரர். இதனால் அவருக்கு எதிரிகள் அதிகம். குறிப்பாக மதவெறியர்களிடமிருந்து பெரும் மிரட்டல்கள் இருந்தவண்ணம் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.