6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்!
போபால்: போபாலில் 6 வயது சிறுமி அவரது தாய் வழி தாத்தா மற்றும் மற்றொரு நபரால் தனது 3 வயது தம்பியின் கண் முன்னே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயது முதியவர். இவர் தனது மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு பேத்தியும் 3 வயதில் ஒரு பேரனும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த 8 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமியை வீட்டிலிருந்த ஒரு தனி அறைக்கு சஞ்சய் (38) என்பவர் சமோசா கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்றுள்ளார்.
3 வயது சகோதரன்
அந்த அறையில் ஏற்கெனவே அந்த சிறுமியின் தாத்தாவும், அவரது 3 வயது சகோதரனும் இருந்துள்ளனர். அந்த 3 வயது சகோதரன் கண் முன் அந்த சிறுமியை தாத்தாவும் சஞ்சயும் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது சிறுமிக்கு ரத்தபோக்கு ஏற்படவே அவரை விட்டுவிட்டனர்.
சமோசா
பின்னர் அவரிடம் ரூ 20 கொடுத்து சமோசா வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அது போல் அந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் சொல்லவில்லை.
சிறுமி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு வயிறு வலிப்பதாக கூறி வந்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிந்தன. இதை கவனித்த தாய் சிறுமியிடம் என்ன நடந்தது என கேட்டுள்ளார். ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
அதிர்ச்சி அடைந்த தாய்
இதையடுத்து ரத்த கறை படிந்த ஆடைகளை கடந்த வியாழக்கிழமை அந்த சிறுமியே துவைத்ததை பார்த்த அவரது தாய் சிறுமியிடம் மீண்டும் துருவி துருவி கேட்ட போது நடந்ததை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
வேலைக்கு சென்ற பெற்றோர்
இதையடுத்து 50 வயது தாத்தாவையும் சஞ்சய்யையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் சம்பவத் தினத்தன்று இருவரும் குடித்திருந்தது தெரியவந்தது. சிறுமியின் பெற்றோர் கூலி வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றவுடன் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.