தமிழகத்தில் நிலத்தடி நீர் நிலவரம் தெரியுமா?... மத்திய அரசின் பதில் இதுதான்
டெல்லி: தமிழகத்தில் 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும், மழை அதிக அளவு பொழிந்தாலும், அதனை சேமிப்பதற்கான முறையான திட்டங்கள் இல்லாததால், நிலத்தடி நீர் என்பது, அபாய கட்டத்திற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயம், குடிநீர், மற்ற தேவைகளுக்கு தண்ணீர் இல்லாமல் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. இதை தடுப்பதற்காக மத்தியஅரசு பல்வேறு திட்டங்களை தீட்டி இருக்கிறது.
அதன் ஒரு கட்டமாக நீர் மேலாண்மைக்காக ஜலசக்தி என்ற தனி துறையை இப்போது உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் நீர் சேகரிப்பு மற்றும் மேலாண்மை திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய கட்டமாக ஒவ்வொரு மாநிலத்திலும் எங்கெல்லாம் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது என்பதை கண்டறிந்துள்ளனர். அந்த இடங்களில் தண்ணீரை மேம்படுத்துவதற்கு திட்டங்களை உருவாக்க உள்ளனர். நாட்டில் மொத்தம் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை மோசமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு நீர்சேகரிப்பு மற்றும் நீர்வளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சனை தொடர்பாக மக்களவையில் இன்று கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அளித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் 2008ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரை 1139 இடங்களில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 358 தாலுகாக்களில் நிலத்தடி நீர் முழுமையாக வற்றிவிட்டது தெரியவந்தது. மேலும் 105 இடங்களில் நிலத்தடி நீர் மட்டம் அபாயகரமான நிலையில் உள்ளது. 35 இடங்களில் நிலத்தடி நீரில் உப்பு சேர்ந்து முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையை அடைந்துவிட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.