கர்நாடகாவில் 5 தமிழக தொழிலாளர்கள் கொலையான பின்னணியில் கள்ளத்தொடர்பு?
சாம்ராஜ்நகர்: தமிழக தொழிலாளிகள் ஐந்து பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கள்ளத்தொடர்பு விவகாரம் சம்மந்தப்பட்டிருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹராலே கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜேந்திரன், ராஜம்மாள், ரோஜா, காசி மற்றும் சிவம்மாள் ஆகிய தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்களை சக தொழிலாளர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.
இதில் ரோஜா 11வயது சிறுமி என்பது குறிப்பிடத்தக்கது. அத்தனை பேரும், அவர்கள் தங்கியிருந்த குடிசை பகுதியில் வெட்டப்பட்டனர். இதில் ராஜேந்திரன், கரும்பு வெட்ட தொழிலாளர்களை சாம்ராஜ்நகருக்கு கூட்டி வந்து கூலியும் வாங்கி கொடுத்து வந்துள்ளார்.
அப்போது, விதவை பெண் ஒருவருடன் ராஜேந்திரனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவத்தன்று, கூலி கொடுக்கும் தகராறு தொடர்பாக ராஜேந்திரனுடன், சக தொழிலாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். அப்போது கள்ளத்தொடர்பு விவகாரமும் பேசப்பட்டது.
அனைத்து தொழிலாளர்களும் மது போதையில் இருந்துள்ளனர். எனவே இரு கும்பலாக பிரிந்து தங்களுக்குள் வெட்டியுள்ளனர். இதில் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. இத்தகவல்களை போலீசார் தெரிவித்தனர்.