குடியரசுத்தலைவர் பிரணாப்பை சந்தித்தார் சோனியா !
டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி நேற்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து பேசினார்.
நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது வழங்கும் விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.
விருதுகளை வழங்கி பேசிய சோனியாகாந்தி, " சகிப்புத்தன்மை இல்லாததால், நாட்டில் வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இவை, குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு. நாட்டின் அடித்தளத்தையே இவை அசைத்து விடும். ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தை பின்பற்றும் சிலர், வன்முறை மற்றும் வெறுப்புணர்வை பரப்பி, நாட்டை பிளவுபடுத்த முயன்று வருகிறார்கள்.
இவையெல்லாம் தற்செயலான சம்பவங்கள் என்று நாம் எடுத்துகொள்ள முடியாது. இத்தகைய வகுப்புவாத சித்தாந்தங்களால், நாட்டின் ‘வேற்றுமையில் ஒற்றுமை' தத்துவத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. நமது கலாசாரமும், பாரம்பரியமும் இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் நாட்டின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்காக தனது வாழ்நாளையே அர்ப்பணித்தார். அவரைப் பொறுத்தவரை, நாட்டின் ஒற்றுமையை விட உயர்ந்தது எதுவும் இல்லை. எனவே, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டைபாதுகாக்க அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்", என்றார்.
கடந்த சில நாட்களாக மாட்டிறைச்சி விவகாரம், ஹரியானாவில் தலித் சிறுவர்கள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக.,விற்கும் தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்றது.
மேலும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சேர்ந்து இன்று மீண்டும் சந்திக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார். அப்போது, சகிப்புத்தன்மை பிரச்சினையை மறுபடியும் எழுப்ப உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.