இன்று மாலை விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட்.. இறுதி கட்ட பணிகளில் இஸ்ரோ தீவிரம்
ஸ்ரீஹகோட்டா : முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் ஜிசாட்-6 செயற்கைக்கோள் இன்று மாலை 4.52 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பணிகளில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கான 29 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 11.52 மணிக்கு தொடங்கியது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகள் மூலமாக செயற்கைகோள்களை விண்ணில் ஏவி வருகிறது.
அந்த வகையில், தற்போது ஜிசாட்-6 என்ற தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டுக்கான செயற்கைக் கோளை ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது. ஜிஎஸ்எல்வி வரிசையில் இது 9-வது ராக்கெட். அதேபோல ஜிசாட் வரிசையில் இது 25-வது செயற்கைக்கோள் ஆகும்.
ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட், முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் க்ரையோஜெனிக் இன்ஜின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 முறை கிரையோஜெனிக் இன்ஜின் மூலம் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியிருக்கிறது.
தற்போது, தகவல் தொழில் நுட்ப பயன்பாட்டுக்காக செலுத்தப்பட உள்ள ஜிசாட்-6 செயற்கைக் கோள் ரூ.250 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மொத்த எடை 2,117 கிலோவாகும். இதில் எஸ்-பேண்ட் தொழில்நுட்ப முறை இடம்பெற்றுள்ளது. செயற்கைக் கோளில் மிகப்பெரிய 'ஆண்டனா' பொருத்தப்பட்டுள்ளதால், மிகச் சிறிய தொலை பேசி மூலமாகவும் நேரடியாக செயற்கைக்கோளை, எந்த இடத்தில் இருந்து வேண்டுமானாலும் தொடர்பு கொள்ள முடியும்.
இந்த ஆண்டனாவுக்கு அதிகளவிலான சிக்னலை ஈர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே, தகவல் தொடர்புத் துறைக்கு அதிலும் குறிப்பாக, பாதுகாப்புத்துறைக்கு இந்த செயற் கைக்கோள் பேருதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ராக்கெட் ஏவப்பட்ட 18 நிமிடங்களில் பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டரும், அதிகபட்சம் 35,975 கிலோ மீட்டரும் கொண்ட தாற்காலிக சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் செலுத்தப்படும். அதன் பிறகு செயற்கைக்கோளில் உள்ள திரவ எரிபொருள் மோட்டார் இயக்கப்பட்டு, சரியான சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.