178 பொருட்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18% ஆக ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஜெட்லி அதிரடி அறிவிப்பு
ஜவுளி உட்பட 173 பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
குவஹாத்தி: 178 பொருட்களுக்கான 28 % ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. அவை அனைத்தும் 18% சதவிகித வரிவிகிதங்களுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது நவம்பர் 15 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.
ஆடம்பர பொருட்கள் என்று கருதப்படும் 50 பொருட்கள் மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி விகிதத்திற்குள் கொண்டுவரப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
குவஹாத்தியில் இன்று நடைபெற்ற 23வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜவுளி பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டு உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஜிஎஸ்டி வரிவிதிப்பு
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரி, 5, 12, 18, 28 என நான்கு விகிதங்களில் வசூலிக்கப்படுகிறது.
தொழில் முனைவோர் கோரிக்கை
இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
அருண்ஜெட்லி
இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 23வது கூட்டம் அசாம் மாநிலம் குவாஹாத்தி இன்று நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு
இதில் சிறு வர்த்தர்கள் பயன்பெறும் வகையில் சலுகை அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளது. மேலும் மக்கள் அதிக அளவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கோரிக்கை ஏற்பு
இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 70க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 178 இனங்களின் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஏசி ஹோட்டல் ஜிஎஸ்டி குறைப்பு
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, 7500 ரூபாய் ரூம் வாடகை வசூலிக்கும் ஹோட்டல் அறைகளுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைத்துள்ளதாக கூறினார். இதேபோல ஏசி, ஏசி அல்லாத ரெஸ்டாரண்ட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்றும் கூறினார்.
நவம்பர் 15 முதல் அமல்
மொத்தம் 178 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இனி 50 பொருட்களுக்கு மட்டுமே 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இந்த வரி விகித மாற்றம் நவம்பர் 15 ஆம் தேதி முதல் அமலாகிறது. ஷேவிங் கிரீம், ஷாம்பு, பேஸ்ட் உள்ளிட்ட பல பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. 6 பொருட்கள் 18% வரியில் இருந்து 5% மாக மாற்றப்பட்டுள்ளது. 8 பொருட்கள் 12% வரிவிகிதத்தில் இருந்து 5% மாக மாற்றப்பட்டுள்ளது. 6 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
இதனிடையே மக்கள் கோபம் அதிகரிப்பதாலும் எதிர்கட்சிகள் கண்டனங்கள் தெரிவித்து வருவதாலும், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாகவும் ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.