ஜிஎஸ்டி வரி, மானிய குறைப்பு.. இரட்டை அடியால் காஸ் சிலிண்டர் விலை உயர்வு!
டெல்லி: ஜிஎஸ்டி வரி மற்றும் மானிய குறைப்பு காரணமாக இந்த மாதத்தில் இருந்து ஒவ்வொரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் ரூ. 32 வரை அதிகம் செலவிட வேண்டியிருக்கும். ஒருபக்கம் அனைவருக்கும் காஸ் சிலிண்டர் திட்டத்தை கொண்டுவந்த அரசு மறுபக்கம், விலையேற்றி துன்புறுத்துகிறது.
வாடிக்கையாளர்கள், புதிய இணைப்புகள் பெறும் கட்டணமும் உயர்ந்துள்ளது. சிலிண்டர்களை இரண்டு ஆண்டுக்கொருமுறை கட்டாய ஆய்வு செய்யும் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
காஸ் சிலிண்டர் 5% ஜிஎஸ்டி வரம்பில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லி போன்ற பெரும்பாலான மாநிலங்களில் கிரீன் எரிபொருளுக்கு வரி விதிக்கவில்லை, சில மாநிலங்களில் வாட் 2% முதல் 4% என்ற அளவில் இருந்தது.
அதிகரிக்கும்
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தியபின் ஒவ்வொரு எல்பிஜி சிலிண்டரின் விலையும் எரிபொருளுக்கு வரி விதிக்காத மாநிலங்களில் 12-15 ரூபாய் அதிகரிக்கும்.
வரி வேறுபாடு
பிற மாநிலங்களில், ஜிஎஸ்டி விகிதத்திற்கும் வாட் வரிக்கும் இடையில் உள்ள இடைவெளியை பொருத்து விலை உயர்வு இருக்கும். ஜூன் மாதத்தில் மானியத் தொகையை குறைத்தது வாடிக்கையாளர்களுக்கான தாக்கத்தை கூட்டுகிறது.
மானிய தொகை குறைப்பு
"உதாரணத்திற்கு ஆக்ராவில் தகுதிவாய்ந்த நுகர்வோருக்கு ரூ. 119.85 மானிய தொகை வழங்கப்பட்டது. ஜூன் மாதம் அது குறைக்கப்பட்டது. புதிய அறிவிப்பைப் பொறுத்தவரையில், இனிமேல் அவர்களது வங்கிக் கணக்கில் 107 ரூபாய் மட்டுமே வரவு வைக்கப்படும்.
சிலிண்டருக்கு ரூ.32
இந்த மாற்றங்கள் காரணமாக, மானியகுறைப்பு, ஜிஎஸ்டி வரி ஏற்றம் ஆகியவற்றால், சிலிண்டர் ஒன்றுக்கு, விலை அதிகரிப்பு ரூ. 32 ஆக இருக்கும். மாநிலங்களில் விலைகளில் சிறிய மாறுபாடு ஏற்பட, போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் போன்ற செலவுகள் காரணமாக உள்ளது. சர்வதேச விலை இடைவெளி மாறுபாடு காரணமாக ஒவ்வொரு மாதமும் மானியத் தொகை மாறுபடும்.