ஜிஎஸ்டிக்கு ஆட்சேபனை.. தெலுங்கு மெர்சலுக்கு சென்சார் சான்றிதழ் மறுப்பு.. ரிலீஸ் தள்ளிவைப்பு
ஹைதராபாத்: மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கான (அதிரிந்தி) சென்சார் சான்றிதழ் மறுக்கப்பட்டு விட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்த வசனத்தை படத் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் நீக்கி விட்டது. பட ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக ஜிஎஸ்டி தொடர்பான வசனத்தை மியூட் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது வசனத்தை நீக்கியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் நாளை திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லையாம். தள்ளிப் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் தேனாண்டாள் பிலிம்ஸ் இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.
தமிழ் மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வசனங்கள் அரசியல் புயலைக் கிளப்பியது நினைவிருக்கலாம். தமிழக பாஜகவைச் சேர்ந்த 3 தலைவர்கள் பயங்கரமாக எதிர்ப்புத் தெரிவிக்கப் போய் படத்திற்கு பிரமாதமான விளம்பரம் கொடுத்து ஒட்டுமொத்த தமிழகமும் தியேட்டருக்குப் போய் படத்தைப் பார்த்து விட்டது. அத்தோடு தேசிய அளவிலும் படம் பெரும் பெயரைப் பெற்றது.
#Adhirindhi not releasing tom. Will update on release date. @ThenandalFilms @nseplofficial
— Aditi Ravindranath (@aditi1231) October 26, 2017
இந்த நிலையில் தற்போது மெர்சல் படத்தின் தெலுங்குப் பதிப்புக்கு சிக்கல் வந்துள்ளது. இந்த இழுபறிக்கும், சென்சார் போர்டு சான்றிதழ் கிடைக்காமல் போனதற்கும் பாஜகவே காரணம் என்று பேச்சு அடிபடுகிறது.
தமிழக சென்சார் போர்டுக்கு இந்த வசனங்களில்ஆட்சேபனை இல்லை. இதனால்தான் தணிக்கை அனுமதி தரப்பட்டதாக சென்சார் போர்டு அதிகாரியே கூறியிருந்தார். ஆனால் ஆந்திராவில் சென்சார் போர்டு முரண்பாடான நிலை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.