ஜிஎஸ்டி வரியின் மூலம் இந்தியாவின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது : அருண் ஜெட்லி
ஜிஎஸ்டி வரியின் மூலம் இந்தியாவின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் இந்திய வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்திய மாநிலங்களுக்கான வரி வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச்சட்டம் கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு, நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
நாடு முழுவதும் ஒரே விதமான வரி விதிப்பை அமல் செய்யும் இந்த திட்டத்திற்கு பலத்த ஆதரவும், எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது. இந்நிலையில், ஓராண்டு நிறைவு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தனது கருத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.
புதிய சாதனை
ஜூலை 1, 2017 ஜிஎஸ்டி வரி பல்வேறு விவாதங்களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட நாள். இன்றோடு ஓர் ஆண்டி நிறைவடைந்து இருக்கிறது. இந்த ஓராண்டில் இந்தியாவின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரி விதிப்பை அமல்படுத்தியதன் மூலம் அனைத்து மாநில அமைச்சர்களும் புதிய சாதனையை படைத்துள்ளனர்.
செஸ் வரியிலிருந்து விடுதலை
இந்த வரி விதிப்பின் மூலம், நாடு முழுவதும் ஒரே வரி விகிதம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வரிவிதிப்பின் மூலம் , இதுவரை இந்தியாவில் இருந்து வந்த 17 வரிச்சட்டங்கள் மற்றும் செஸ் வரிகளில் இருந்து இந்திய மக்கள் விடுதலை அடைந்துள்ளனர்.
சரியானது அல்ல
ஒரே விதமான சதவிகிதத்தை கொண்டு வரச்சொல்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அது இந்தியா போன்றதொரு நாட்டுக்கு உகந்ததாக இருக்காது. காரணம் பலதரப்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகிறார்கள். ராகுல் காந்தியின் யோசனை வளர்ந்த, குறைந்த மக்கள் தொகை உள்ள, அதிக வரி கட்டும் நாடுகளுக்கு மட்டுமே தகுந்ததாக இருக்கும் .
எளிதாகும் தொழில் வாய்ப்பு
ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் தொழில் செய்வது எளிதாக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பின் மூலம் மாநிலங்களுக்கு கிடைக்கும் வரி வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய மாநிலங்கள் தங்களுக்கான வளர்ச்சிப்பணிகளை தாங்களே மேற்கொள்ள முடியும். வருங்காலங்களில் ஜிஎஸ்டியின் முக்கிய அம்சங்கள் எளிதானதாக மாற்றியமைக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பின் மூலம் இந்தியாவிற்கு சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.