ஜிஎஸ்டி மூலம் அரசுக்கும் வணிகர்களுக்குமிடையே நட்புறவு ஏற்பட்டுள்ளது... பிரதமர் மோடி பெருமிதம்
நாட்டில் ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்தது முதல் அரசுக்கும் வணிகர்களுக்குமிடையே நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி: நாடுமுழுவதும் ஒரே வரி ஒரே நாடு என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. மூலம் அரசுக்கும் வணிகர்களுக்குமிடையே நல்ல நட்புறவு நிலவுகிறது என்று பிரதமர் மோடி பெருமிதமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வழங்கிய மான் கீ பாத் வானொலி நிகழ்ச்சியில், " ஜி.எஸ்.டி. இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்திவிட்டது, ஜிஎஸ்டி மூலம் அரசுக்கும் வணிகர்களுக்குமிடையே நட்புறவு ஏற்பட்டுள்ளது " கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், " ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தி ஒரு மாத காலம் ஆகியுள்ள நிலையில் மக்களிடையே ஜி.எஸ்.டி.க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தை மாற்றிவிட்டது. இதில், அனைத்து முடிவுகளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக எடுத்தது என்பதால் ஒருமித்த கருது ஏற்பட்டுள்ளது.
இதுதான் கூட்டாட்சி தத்துவத்துக்கு ஒரு நல்ல உதாரணம். வெற்றிகரமாக ஜி.எஸ்.டி.யை அமல்படுத்தியதன் மூலம் மற்ற நாடுகளுக்கு இந்தியா ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஜி.எஸ்.டி.யின் மூலம் அரசுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே நல்ல நட்பு ரீதியான சூழல் ஏற்பட்டுள்ளது.
காந்தியின் தலைமைப்பண்பு
வெள்ளையரை வெளியேற்றும் போராட்டத்தில் மகாத்மா காந்தியின் தலைமைத்துவம், அனைவர் நினைவிலும் இருக்கிறது. அந்த போராட்டத்தில் பங்குபெற்ற லோக் நாயக், லோஹியா போன்ற தலைவர்கள் நம் நினைவில் இருக்கிறார்கள்.
டாக்டர்.யூசப் மெஹர் அலி
வெள்ளையரை வெளியேற்றும் போராட்ட முழக்கத்தை டாக்டர்.யூசப் மெஹர் அலி தான் உருவாக்கினார் என்பது நம்மில் சிலருக்கு தான் தெரியும். இது தான் வரலாறு.
நாட்டைக் காக்க உயிரைவிட வேண்டியதில்லை
இப்பொழுது நாம் நாட்டிற்காக உயிரை விட வேண்டியது இல்லை. நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்துசெல்ல நாட்டிற்காக நாம் வாழவேண்டும். வெள்ள பாதிப்புகள் குறித்து அனைத்து நேரங்களிலும் நடவடிக்கைகள் எடுக்க 1078 என்ற உதவிஎண் செயல்பட்டு வருகிறது.
உறுதிமொழி எடுக்க வேண்டும்
நாம் ஒரு உறுதிமொழி எடுக்கவேண்டும். தூய்மையற்ற சூழலை நாம் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், வறுமையை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்.
சாதியை ஒழிக்க வேண்டும்
தீவிரவாதத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், சாதியை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், மதவாதத்தை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று நாம் உறுதிமொழி எடுத்து அதன்படி செயல்பட வேண்டும்" என்று கூறினார்.