ஜிஎஸ்டி அறிமுக விழாவை முற்றிலும் புறக்கணித்தது பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாக புறக்கணித்தது.
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவை எதிர்க்கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாக புறக்கணித்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
நீண்ட கால இழுபறிக்கு பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பும், ஆதரவும் இந்திய அளவில் எழுந்தன.
அறிமுக விழா
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி அறிமுக விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி பங்கேற்றுள்ளனர். மேலும், லோக்சபா தலைவர் சுமித்ரா மகாஜன், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காங்கிரஸ் புறக்கணிப்பு
ஆனால், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் முற்றிலுமாக புறக்கணித்தது. இதற்கான அறிவிப்பை நேற்று முன்தினம் காங்கிரஸ் அறிவித்தது.
இதரக் கட்சிகள் புறக்கணிப்பு
இதனைத் தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டோம் என்று காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் உள்ள திமுகவும் அறிவித்தது. அதற்கு முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்தார்.
லாலு புறக்கணிப்பு
இதே போன்று, பிகார் மாநிலத்தில் ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் இந்த விழாவை புறக்கணித்துள்ளது. பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.