"ஹாட்ரிக்?".. கருகுமா தாமரை.. பாஜகவை திணற வெச்சிட்டாரே கெஜ்ரிவால்.. நிமிருமா காங்?.. குஜராத் யாருக்கு
குஜராத்தில் மும்முனை போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
காந்திநகர்: குஜராத் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேசமயம், நடந்து முடிந்த பிரச்சாரங்களின் அதிர்வுகளும் குஜராத் மக்களின் மனசை விட்டு இன்னமும் அகலாமல் உள்ளது..
வழக்கமாக குஜராத்தில் தேர்தல் என்றாலே, பாஜகவுக்கும், காங்கிரசுக்கும்தான் போட்டி இருக்கும்.. ஆனால், இந்த முறை, ஆம் ஆத்மியும் களமிறங்கிவிட்டது..
குஜராத் என்றில்லை, கடந்த 2 வருட காலமாகவே ஆம் ஆத்மி, ஒவ்வொரு மாநிலத்திலும் அதிரடியை காட்டிக் கொண்டிருக்கிறது.. காங்கிரசுக்கு செக் வைக்கிறதோ இல்லையோ, தேர்தல் நடக்கும் மாநிலங்களில் பாஜகவுக்கு கிலியை தந்து கொண்டிருக்கிறது.. ஆட்சியை பிடிப்போம் என்று குஜராத் முழுவதும் ஆம் ஆத்மி கர்ஜிக்க துவங்கியதால், மும்முனைப்போட்டி குஜராத்தில் தானாகவே எழுந்துவிட்டது.
குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளில் வாக்கு பதிவு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
அரியணை
பிரதமர் மோடி, அமித்ஷாவின் சொந்த தொகுதி என்பதாலோ என்னவோ, குஜராத் தேர்தல் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது.. 6 முறை குஜராத்தை ஆக்கிரமித்து கொண்ட பாஜக, 7வது முறையும் அரியணை ஏறுவதற்கான முயற்சியை கையில் எடுத்தது.. டாப்மோஸ்ட் தலைவர்கள் அத்தனை பேரும் குஜராத்தை வட்டமடிக்க துவங்கினர்.. தீவிரமான பிரசாரங்களில் ஈடுபட்டனர்... முக்கியமாக பிரதமர் மோடி, கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட இந்த தேர்தலில்தான், அதிக அளவுக்கு இங்கேயே முகாமிட்டார்.. இதற்கு காரணம் சாட்சாத் பாஜகவேதான்..
ஃபிரிட்ஜ்
தங்கள் கட்சியின் சொந்த பிரமுகர்களே, சீட் கிடைக்காததால் அப்செட் ஆகிவிட்டதை பாஜக எதிர்பார்க்கவில்லை.. போதாக்குறைக்கு மோர்பி பாலம் விபத்தும், அதையொட்டி நடந்த விமர்சனங்களும் பாஜகவை கலங்கடித்துவிட்டன.. எனவே, இந்த தேர்தலில் வென்றாக வேண்டிய நெருக்கடி பாஜகவுக்கு ஏற்பட்டது... இன்னொரு அவசியமும் பாஜகவுக்கு ஏற்பட்டது.. இந்த தேர்தலிலும் வென்றால், 7வது முறையாக மீண்டும் ஆட்சியமைத்து, மேற்கு வங்கத்தில் இடதுசாரிகளின் சாதனையை நெருங்கிவிடும் என்பதால், கூடுதல் கவனம் குஜராத்தில் பாஜக தலைவர்களுக்கு குவிய தொடங்கியது.
சறுக்கல்கள்
தொடர் சறுக்கலில் உள்ள காங்கிரஸோ, இந்த முறையும் குஜராத்தில் முட்டி மோத ஆரம்பித்தது.. எப்படியாவது இந்த முறையாவது குஜராத்தில் வென்றே தீருவது என்ற முடிவுடன் ஏகப்பட்ட கூட்டங்கள் நடத்தி, பிரச்சாரங்களை செய்தது.. மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி என பல தலைவர்கள் குஜராத் தேர்தலுக்காக களமிறங்கினர்.. விலைவாசி பிரச்சனை, பணவீக்கம், தொற்று பாதிப்புகள், வேலையின்மை, போன்ற விவகாரங்களை முன்வைத்து தங்கள் பிரச்சாரங்களை கையிலெடுத்தனர்..
லிஸ்ட்கள்
10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மாதத்துக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ. 3,000 உதவித்தொகை, ரூ. 500-க்கு எரிவாயு சிலிண்டர்கள். தனியாக வசிக்கும் பெண்கள், முதியவர்கள் மற்றும் விதவைப்பெண்களுக்கு மாதம் ரூ. 2,000, பழைய ஓய்வூதிய திட்டம் அமல் போன்ற காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகள் மக்களை வெகுவாக கவர்ந்ததையும் குறிப்பிட வேண்டி உள்ளது.
ராகுல்
ஆம் ஆத்மியை பொறுத்தவரை, எந்த மாநிலத்தில் நுழைந்தாலும், புயலென நுழைந்து, பட்டைய கிளப்பிவிடுடிகிறது.. இந்திய அரசியலில் புதுமையை புகுத்தும் கட்சி ஆம் ஆத்மி என்ற கோஷத்தை முன்வைத்து, தங்களுக்கான அரசியலை செய்ய துவங்கி உள்ளனர்.. காங்கிரஸ் கோட்டைகளை ஆம் ஆத்மி எட்டிப்பிடித்து வந்தாலும், அது குஜராத்தில் கை கொடுக்காது என்கிறார்கள்.. அதாவது ஜிஎஸ்டி வரி முறையால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொடர் பாதிப்புகள் நிறைய உள்ள நிலையில், அரசும் அதுகுறித்து பல விளக்கம் தந்தும், தொழில் துறையினரின் நம்பிக்கையை அரசு பெறமுடியவில்லை..
கணிப்புகள்
இருந்தபோதிலும், பாஜக மீதான நம்பிக்கை அம்மாநில மக்களுக்கு குறையவில்லை என்றே அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள். இந்த முறை, காங்கிரஸைவிட, மோடி அதிகம் விமர்சித்தது ஆம் ஆத்மியை என்பதையும் மறுக்க முடியாது.. இதற்கு இன்னொரு காரணம், தங்களுக்கு இணையான தேர்தல் அறிக்கையை ஆம் ஆத்மியும் வெளியிட்டு கதிகலங்க செய்துவிட்டது.. 300 யூனிட் இலவச மின்சாரம், கல்வி, மருத்துவம் இலவசம், 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை, வேலையில்லா படித்த இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 உதவித்தொகை, மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி என வாக்குறுதி கொடுத்தது...
தாமரை கட்சி
இது எல்லாவற்றையும்விட ஹைலைட் என்னவென்றால், மதரீதியிலான பிரசாரத்தை திடீரென கெஜ்ரிவால் கையிலெடுத்து திணறடித்துவிட்டார்.. இதை பாஜகவே எதிர்பார்க்கவில்லை.. அவர்கள் பாணி பிரச்சாரத்தை, அதுவும் குஜராத்திலேயே, அதுவும் முதல்நாளிலேயே, ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்ற கோஷத்துடன் கெஜ்ரிவால் கையிலெடுத்தது, பாஜகவுக்கு கலக்கத்தையே தந்துள்ளது.. ஒரு இந்துத்துவாவாதியாக கெஜ்ரிவால் பேச்சுக்கள் இருந்ததுடன், புதிய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் போட்டோ, லட்சுமி, விநாயகர் போட்டோ என்றெல்லாம் ட்வீட்களை போட்டு தாமரை கட்சியை கதிகலங்க செய்துவிட்டார்.
ஹாட்ரிக்
சுருக்கமாக சொல்லப்போனால், பாஜகவே மறுபடியும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் எதிர்க்கட்சியாக தான் இந்த முறையும் அமரும் என்றும், புதுவரவான ஆம் ஆத்மி பெரிதாக எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது அடித்து சொல்கிறார்கள்.. மற்றொருபக்கம், தொடர் சரிவில் பாஜக, தொடர் வீழ்ச்சியில் காங்கிரஸ் உள்ளபோது, ஆம் ஆத்மிக்கு ஹாட்ரிக் வெற்றி அமையும் என்றும் ஒருசாரார் நம்புகிறார்கள்... என்னதான் நடக்க போகிறது.. பார்ப்போம்..!!!