பாஜகவை நம்பாதீங்க.. திடீரென கடலுக்குள் குதித்த காங்கிரஸ் எம்எல்ஏ.. பரபர குஜராத் தேர்தல்..என்னாச்சு?
காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜகவை நம்பாதீங்க எனக்கூறி காங்கிரஸ் எம்எல்ஏவும், தற்போதைய வேட்பாளருமான ஒருவர் ஆதரவாளர்களுடன் கடலில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நாளை மறுநாள் 89 தொகுதிகளுக்கும், 2வது கட்டமாக 93 தொகுதிகளுக்கு 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
முதற்கட்ட தேர்தல் நடக்கும் 89 தொகுதிகளுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி உள்ளது. மூன்று கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
2024 லோக்சபா தேர்தல்: அதிமுகவுடன் கூட்டணி-15-ல் தொடங்கி அந்த 10 தொகுதிகளை கறாராக கேட்க பாஜக முடிவு!
காங்கிரஸின் கோட்டை
குஜராத்தை பொறுத்தமட்டில் அம்ரேலி மாவட்டம் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. இங்கு தாரி, அம்ரேலி, சாவர்குண்ட்லா, லாதி மற்றும் ராஜூலா என மொத்தம் 5 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2017 தேர்தலில் 5 சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும் தாரி தொகுதியில் வெற்றி பெற்ற ஜேி காகாடியா கடந்த 2020ல் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து மீண்டும் அவர் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் இந்த தொகுதி மட்டும் தற்போது பாஜக கட்டுப்பாட்டில் உள்ளது.
ராஜூலா தொகுதி எம்எல்ஏ
இந்நிலையில் தான் மாவட்டத்தில் உள்ள ராஜூலா சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அம்பரீஷ் டெர் எம்எல்ஏவாக உள்ளார். தற்போதைய சட்டசபை தேர்தலில் ராஜூலா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் அம்பரீஷ் டெர் களமிறங்கி உள்ளார். இவர் இந்த தொகுதியில் கடந்த 2017 ல் முதல் முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது 2வது முறையாக போட்டியிடுகிறார். வெற்றி பெறும் முனைப்பில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.
கடலில் குதித்த காங்கிரஸ் வேட்பாளர்
இந்நிலையில் தான் தொகுதியில் உள்ள விக்டர் துறைமுகத்தின் அருகே சஞ்ச் பந்தர் கிராமம் உள்ளது. கடற்கரை கிராமமான இங்கு விக்டர் துறைமுகத்தில் இருந்து செல்ல மேம்பால வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் எம்எல்ஏ அம்பரீஷ் டெர் மேம்பாலம் அமைக்க ஆளும் பாஜகவிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். ஆனால் பாஜக அரசு நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இந்நிலையில் தான் அம்பரீஷ் டெர் அந்த பகுதியில் பிரசாரம் செய்தார். இந்த வேளையில் திடீரென்று அவர் தனது ஆதரவாளர்களுடன் கடலில் குதித்தார்.
300 மீட்டர் நீந்தி கரை சேர்ந்தனர்
இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். கடலில் குதித்த அம்பரீஷ் டெர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விக்டர் துறைமுகத்தில் இருந்து சஞ்ச் பந்தர் வரை நீந்தி கரை சேர்ந்தனர். சுமார் 300 மீட்டர் தூரம் அவர்கள் நீச்சலடித்து சஞ்ச் பந்தர் கிராமத்துக்கு சென்றனர். இதுபற்றி கேட்டதற்கு, ‛‛கடந்த 5 ஆண்டுகளாக பாலம் அமைக்க தொடர்ந்து பாஜக அரசிடம் வலியுறுத்தி வந்தேன். ஆனால் பாஜக அரசு கோரிக்கையை ஏற்கவில்லை. மக்கள் பிரச்சனைக்கு பாஜக அரசு செவிசாய்க்காமல் இருந்தது. ஆனால் தற்போது மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சாதித்ததாக பொய்களை கூறி பொதுமக்களை ஏமாற்றுகிறது. பாஜகவை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இதனை பொதுமக்களிடம் எடுத்து கூறவே கடலில் குதித்தேன்'' என காங்கிரஸ் எம்எல்ஏ அம்பரீஷ் டெர் கூறினார்.
இந்த முறை யாருக்கு வெற்றி?
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அம்பரீஷ் டெர் போட்டியிடும் நிலையில் பாஜக சார்பில் ஹிரா சோலங்கி களமிறக்கப்பட்டார். கடந்த முறை இவர்கள் 2 பேர் இடையே தான் போட்டி நிலவியது. அப்போது அம்பரீஷ் டெர் 12,719 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பாஜகவின் ஹிரா சோலங்கியை வீழ்த்தினார். இந்த முறையும் இவர்கள் 2 பேர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்களுடன் ஆம்ஆத்மி சார்பில் பாரத் பால்தானியா கோதாவில் இறங்கி உள்ளார். இதனால் மும்முனை போட்டி நிலவி வருகிறது. ஆம்ஆத்மி போட்டியால் தொகுதியில் ஓட்டுக்கள் பிரிய வாய்ப்புள்ளது. இது பாஜக, காங்கிரஸில் யாருக்கு சாதகமாக உள்ளது? என்பதை அறிய தேர்தல் முடிவு வெளியாகும் டிசம்பர் 8 ம் தேதி வரை நாம் காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.