‛அந்தர் பல்டி’.. குஜராத்தில் பாஜக சார்பில் இலவச திட்டங்கள் அறிவிப்பு.. வெளியான முக்கிய அறிவிப்புகள்
காந்தி நகர்: தேர்தலில் இலவச திட்டங்கள் அறிவிக்க பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் ‛அந்தர் பல்டி' அடித்து குஜராத்தில் பாஜக சார்பில் ஏராளமான இலவச திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் பெண்களை குறிவைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
குஜராத்தில் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தம் 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிளுக்கு டிசம்பர் 1ம் தேதியும், அடுத்த 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 5ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் தான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக வியூகங்கள் வகுத்து செயல்பட்டு வருகிறது.
குஜராத் தேர்தல்.. ஆட்டம் காட்டும் மாஜி 'தலைகள்'.. பக்கா 'ப்ளான்' போட்ட பாஜக.. ஸ்கெட்ச் யாருக்கு?
தேர்தல் அறிக்கை வெளியீடு
குஜராத்தில் கடந்த 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் இந்த முறையும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் குஜராத் மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், பாஜக மாநில தலைவர் சிஆர் பட்டீல் உள்ளிட்டவர்கள் பல்வேறு அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.
பெண்களுக்கு அரசு வேலை
அதில், ‛‛மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இளைஞர்களுக்கு 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும். அனைத்து மாணவிகளுக்கு இலவசமாக தரமான கல்வி அளிக்கப்படும். தீவிரவாத எதிர்ப்பு குழு அமைக்கப்படும். விவசாயிகளின் உள்கட்டமைப்பு ரூ.10 ஆயிரம் கோடியில் மேம்படுத்தப்படும்.
பொது சிவில் சட்டம்
மாநிலத்தில் நீர்ப்பாசன திட்டத்துக்காக ரூ.25 ஆயிரம் கோடியில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் கடல் உணவு பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.110 கோடி மதிப்பிட்டில் இலவச நோய் கண்டறிதல் திட்டம் செயல்படுத்தப்படும். கோவில்களை புதுப்பிக்கவும், மேம்படுத்தவும் ரூ.1,000 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் (யூனிபார்ம் சிவில் கோட்) அமல்படுத்தப்படும். குஜராத்தை பொருளாதாரத்தை 1 டிரில்லியன் டாலராக மாற்றப்படும்
இலவச திட்டங்கள்
குஜராத்தில் முதிய பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அறிமுகம் செய்யப்படும். மழலை பள்ளி முதல் பட்ட மேற்படிப்பு வரை பெண்களுக்கு இலவசமாக தரமான கல்வி வழங்கப்படும். மாணவிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படும். பொருளாதாரத்தில் நலிவடைந்த குடும்பங்களை சேர்ந்த கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டரும், 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் இலவச சைக்கிள்களும் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மாதாந்திர இலவச ஊட்டச்சத்து திட்டம் அறிமுகம் செய்யப்படும். ஒவ்வொரு ஆண்டும் இலவசமாக 2 காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும் என்பன உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
வன்முறையில் சொத்து பறிமுதல்
முன்னதாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛மாநிலத்தில் அச்சுறுத்தல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களை முற்றிலும் ஒழிக்கவும், ஸ்லீப்பர் செல்களைக் கண்டறிந்து அழிக்கவும் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்பட உள்ளது. மேலும் குஜராத்தில் யூனிபார்ம் சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மேலும் மாநிலத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தும் சமூக விரோதிகளிடம் இருந்து சொத்துகளை கைப்பற்றவும் சட்டம் கொண்டு வரப்படும். அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்து 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றப்படும்'' என்றார்.
முதல்வர் கூறியது என்ன?
இதுபற்றி குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறுகையில், ‛‛தேர்தல் அறிக்கையை வெளியிட்டதில் மகிழ்ச்சி . 20 ஆண்டுகளுக்கு மேலாக குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் இருப்பது வெறும் வாக்குறுதிகள் மட்டும் அல்ல. முறைப்படி நிறைவேற்றப்படும். பிரதமர் மோடி வகுத்து தந்த வளர்ச்சியை அடைய தொடர்ந்து பாஜக அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டு வருகிறது'' என்றார்.
அந்தர்பல்டி என குற்றச்சாட்டு
மத்திய பாஜக அரசு இலவச திட்டங்களை எதிர்த்து வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இலவச திட்டங்களுக்கு எதிராக திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை மறைமுகமாக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இந்நிலையில் தான் குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி பாஜக சார்பில் முதிய பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவச கல்வி திட்டம், இலவச எலக்ட்ரிக் ஸ்கூட்டர், சைக்கிள்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சில நெட்டிசன்கள் குறிப்பிட்டு பாஜக அந்தர்பல்டி அடித்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.