மோடியின் அண்ணன் மகள்.. அதனால, உங்களுக்கு தேர்தலில் டிக்கெட் கிடையாது.. சோனலிடம் சொன்ன குஜராத் பாஜக!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் சோனல், விரும்பியும் கூட, அவருக்கு பாஜக டிக்கெட் வழங்க மறுத்துவிட்டது.
குஜராத் மாநிலத்தின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று அகமதாபாத். இந்த நகரத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதை அடுத்து ஒவ்வொரு கட்சியும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. பாஜகவும் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு இருக்கிறது.
ரேஷன் கடை நடத்துகிறார்
இந்த தேர்தலில் போதாக்தேவ் வார்டில் இருந்து பாஜக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார் 30 வயதை தாண்டிய சோனல் மோடி. இவர் பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடியின் மகளாகும். அகமதாபாத் நகரில் இவர் நியாய விலை கடை ஒன்றை நடத்தி வருகிறார். குஜராத் நியாயவிலைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
பாஜக விதிமுறை
எனவே சமூகத்தில் ஓரளவு செல்வாக்கு செலுத்தி வரும் இவர், பாஜக சார்பில் போட்டியிட விரும்பி கேட்டு உள்ளார். ஆனால், வியாழக்கிழமை பாஜக வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இல்லை. இது குறித்து பாஜக மாநில தலைவர், சி.ஆர். பாட்டில் கூறுகையில், விதிமுறை என்று வந்துவிட்டால் அனைவருக்கும் ஒன்றுதான். எங்களை பொறுத்த அளவில் தனி நபர்களை விட கட்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்போம். அப்படிப்பார்த்தால் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் என்ற போதிலும் கூட பாஜக விதிமுறைப்படி அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை.
வாரிசுகளுக்கு இடமில்லை
சமீபத்தில்தான், குஜராத் பாஜக, பாஜக பிரமுகர்களின் வாரிசுகளுக்கும் அல்லது சொந்தக்காரர்களும் தேர்தலில் போட்டியிட டிக்கெட் கொடுப்பதில்லை என்று முடிவு செய்திருந்தது. இந்த விதிமுறையை நரேந்திர மோடியின் அண்ணன் மகள் என்பதற்காக மட்டும் மாற்றிக் கொள்ள மாட்டோம், என்று தெரிவித்துள்ளார்.
வாரிசு அடிப்படையில் கேட்கவில்லை
அதேநேரம், சோனல் மோடி இதுபற்றி கூறுகையில், நான் பாஜகவின் உறுப்பினராக இருப்பதால் அந்த அடிப்படையில் சீட்டு கேட்டு விண்ணப்பித்தேன். நரேந்திர மோடியின் அண்ணன் மகள் என்ற உரிமையோடு கேட்கவில்லை. இருப்பினும் எனக்கு சீட்டு கொடுக்காவிட்டாலும், பாஜக வெற்றிக்காக உழைப்பேன். தொடர்ந்து கட்சி பணியில் தீவிரமாக பணியாற்றுவேன் என்று தெரிவித்தார்.
மோடி பெயர்
இதுகுறித்து பிரகலாத் மோடி கூறுகையில், எனது குடும்பத்தில் யார் வேண்டுமானாலும் எந்த முடிவு எடுத்துக் கொள்ளவும் முழு உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில், எனது மகள் பாஜக சார்பில் சீட் கேட்டு இருப்பார். எந்த ஒரு விஷயத்திற்கும் நரேந்திர மோடியின் பெயரை உபயோகிப்பது கிடையாது. இனியும் அதைச் செய்ய மாட்டோம். நாங்கள் எங்களது சொந்த உழைப்பில்தான் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்தார்.