தமிழக பாஜகவுக்கு "மெர்சல்" பிடிக்காம போகலாம்.. ஆனால் குஜராத் வரவேற்குதே.. "பீஸ் ப்ரோ"!!
Recommended Video
அகமதாபாத்: தமிழகத்தில் உள்ள சில பாஜக தலைவர்கள் மெர்சல் படத்தை எதிர்த்து விழுந்து விழுந்து குரல் கொடுத்தனர். ஆனால் குஜராத்திலோ, மெர்சல் "மேஜிக்"குக்கு நல்ல வரவேற்பு உள்ளது.. அதாவது, மேஜிக் கலைஞர்களை வைத்து பிரசாரம் செய்து வருகிறது பாஜக.
மெர்சல் படத்தில் மேஜிக் விஜய் ரசிகர்களைக் கவர்ந்தார். அதேபோல மேஜிக் கலைஞர்களை வைத்து தனது திட்டங்களை பிரசாரம் செய்யவுள்ளது குஜராத் பாஜக. குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளிலும் இந்த மேஜிக் கலைஞர்கள் ஜீபூம்பா போட்டு கலக்கப் போகிறார்கள்.
மேஜிக் செய்வதோடு மட்டுமல்லாமல் பாஜகவின் திட்டங்கள் குறித்தும் அவர்கள் வித்தியாசமாக மேஜிக் கலை மூலம் விளக்குவது மக்களைக் கவரும் என பாஜக நம்புகிறதாம்.
மேஜிக் பிரசாரம்
மோடி இன்னும் குஜராத்தில் பிரசாரத்தைத் தொடங்காமல் உள்ளார். அதேசமயம், அவர் வருவதற்குள் பாஜக பிரசாரத்தை களை கட்ட வைக்க மாநில பாஜக படு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதிதான் இந்த மேஜிக் பிரசாரம்.
வாடகைக்கு பிடிக்கப்பட்ட மேஜிக் கலைஞர்கள்
இன்று முதல் இந்த மேஜிக் பிரசாரம் களை கட்ட ஆரம்பித்துள்ளது. 182 தொகுதிகளிலும் இவர்கள் போய் மேஜிக் ஷோ நடத்தி அதன் மூலம் பாஜகவுக்கு ஆதரவு திரட்டுவார்கள். இதற்காக தொழில்முறை மேஜிக் கலைஞர்களை வாடகைக்குப் பிடித்துள்ளனராம்.
மக்கள் மனதைக் கவர்வார்கள்
ஏற்கனவே தெரு நாடகம், பாரம்பரிய நடனம், 3டி பிரசாரம் என பாஜகவினர் டிசைன் டிசைனாக பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த வரிசையில் தற்போது மேஜிக் ஷோக்களைச் சேர்த்துள்ளனர். பாஜகவின் முழக்கங்களை இந்த மேஜிக் கலைஞர்கள் எளிதாக மக்கள் மனதில் பதிய வைப்பார்கள் என கட்சிக்காரர்கள் நம்புகிறார்கள்.
காங்கிரஸின் கிண்டல்
ஆனால் இதையும் காங்கிரஸ் தனக்கு சாதகமாக்க முயல்கிறது. இதுகுறித்து குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் பரத்சிங் சோலங்கி கூறுகையில், பாஜக ஒரு மாயக்காரர்கள் நிறைந்த கட்சி. அதைத்தான் இந்த மேஜிக் பிரசாரம் மீண்டும் நிரூபிக்கிறது.. ராகுல் காந்தியை திட்டுவதைத் தவிர இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்று நக்கலடித்துள்ளார்.