குஜராத்தின் 'ராதாபுரம் '- 372 வாக்குகள்- சட்ட அமைச்சரின் தேர்தல் வெற்றி செல்லாது- ஹைகோர்ட் தீர்ப்பு
அகமதாபாத்: குஜராத் சட்ட அமைச்சர் பூபேந்திர சுதஸ்மாவின் தேர்தல் வெற்றி செல்லாது என குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு அளித்திருக்கிறது.
குஜராத்தில் ஆளும் பாஜக அரசின் கல்வி மற்றும் சட்ட அமைச்சராக இருப்பவர் பூபேந்திரசின் சுதஸ்மா. இவர் 2017 சட்டசபை தேர்தலில் டோல்கா தொகுதியில் போட்டியிட்டு 372 வாக்குகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
வருமானத்தை மறைத்த வழக்கு- ரத்து செய்ய கோரிய கார்த்தி சிதம்பரம் மனு டிஸ்மிஸ்!
வெற்றியை எதிர்த்து வழக்கு
காங்கிரஸ் கட்சியின் அஷ்வின் ரதோடுதான் பூபேந்திரசின் சுதஸ்மாவை எதிர்த்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது 429 தபால் வாக்குகளை விதிகளை மீறி தேர்தல் அதிகாரி செல்லாது என்று அறிவித்தார்; ஆகையால் பூபேந்திரசின் சுதஸ்மா வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி அஷ்வின் ரதோடு வழக்கு தொடர்ந்தார்.
சட்ட அமைச்சர் வெற்றி செல்லாது
இதனை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்றம் பூபேந்திரசின் சுதஸ்மா வெற்றியை செல்லாது என தீர்ப்பளித்தது. குஜராத் மாநில பாஜகவின் முதுபெரும் தலைவராக இருப்பவர் பூபேந்திரசின் சுதஸ்மா. அவரது தேர்தல் வெற்றி செல்லாது என்ற அறிவிப்பு பாஜகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் வழக்கு
தமிழகத்திலும் இதேபோல ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2016-ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது ராதாபுரம் தொகுதியில் திமுகவின் அப்பா, அதிமுகவின் இன்பதுரை உள்ளிட்டோர் போட்டியிட்டனர். இதில் இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பாவு, சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
உச்சநீதிமன்ற நிலுவையில் வழக்கு
வாக்கு எண்ணிக்கையின் போது 203 தபால் வாக்குகளை எண்ணவில்லை. 19, 20, 21 சுற்றுகள் எண்ணிக்கையில் தங்களை அனுமதிக்கவில்லை என்பதுதான் அப்பாவு தரப்பின் புகார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ராதாபுரம் தொகுதியில் சர்ச்சைக்குரிய வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டது. ஆனால் இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.