படேல் சமூகத்தினர் போராட்டம் எதிரொலி..குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் மாற்றம்?
டெல்லி: படேல் சமூகத்தினரினர் நடத்திய போராட்டம் காரணமாக குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் ஆனந்திபென் பட்டேல் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதன் முதல் கட்டமாக, குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேலை மாற்றுவதற்கு பாஜக திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குஜராத் மாநிலத்தில் 13 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பு வகித்து வந்த நரேந்திர மோடி, 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதன் பிறகு புதிய முதல்வராக ஆனந்திபென் படேல் பதவியேற்றார்.
இந்நிலையில், கல்வி, வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் கடந்த ஆண்டு போராட்டத்தைத் தொடங்கினர். இந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த 23 வயது இளைஞர் ஹார்திக் படேல், தேசவிரோதக் குற்றச்சாட்டின் கீழ் கைதாகி, 200 நாள்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இதனால், முதல்வர் ஆனந்திபென் படேல் மீது படேல் சமூகத்தினர் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில், அங்கு பெரும்பான்மையாக வசிக்கும் படேல் சமூகத்தினரின் வாக்குகளைப் பெறுவதற்கு பாஜக திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, குஜராத் மாநிலத்தின் அரசியல் நிலைமை குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடியின் நம்பிக்கைக்குரியவரும், பாஜக மூத்த தலைவருமான ஓம் மாத்தூர் அண்மையில் அறிக்கை ஒன்றை பாஜக தலைமையிடம் அளித்தார். அதில், படேல் சமூகத்தினரின் போராட்டத்தை முதல்வர் ஆனந்திபென் படேல் சரியாகக் கையாளத் தவறிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், மத்திய-மாநில அரசுகளுக்கிடையிலான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்றும், அதற்கு ஆட்சியிலும், கட்சியிலும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஆனந்திபென் பட்டேலுக்கு கவனர் பதவி கொடுக்கப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.