குஜராத் தேர்தல்: பாஜகவின் சூரத் கோட்டையில் எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி!
சூரத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில், சூரத் மாநகராட்சியில் 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த பிப்.21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த அனைத்து மாநகராட்சிகளும் பல ஆண்டுகளாகவே பாஜக வசம் இருந்து வருகிறது. 6 மாநகராட்சிகளிலும் மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், தேர்தல் முடிவுகளின் படி, 6 மாநகராட்சிகளிலும், பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. குறிப்பாக, சூரத்தில் முதல் முறையாக தேர்தல் களம் கண்ட ஆம் ஆத்மி கட்சி, அங்கு மட்டும் 27 இடங்களில் வெற்றிப் பெற்று அசத்தியுள்ளது. ஆனால், இதே சூரத்தின் 120 இடங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை.
அதேபோல், அகமதாபாத் மாநகராட்சியில் 21 இடங்களில் போட்டியிட்ட அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல்-முஸ்லிமீன், ஏழு இடங்களை வென்றுள்ளது. இந்த ஏழு இடங்களும் காங்கிரஸ் வசமிருந்து கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி: நன்றி குஜராத்..சேவை செய்ய வாய்ப்பு - மோடி நெகிழ்ச்சி
இரவு 7 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 575 இடங்களில், பாஜக 463 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 44 இடங்களையும், ஆம் ஆத்மி 27 இடங்களையும் வென்றுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி மூன்று இடங்களில் வென்றுள்ளது.
சூரத் மாநகராட்சியில் கிடைத்த வெற்றியை ஆம் ஆத்மி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், "புதிய அரசியலை அறிமுகப்படுத்திய குஜராத் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்று ட்வீட் செய்துள்ளார்.