குஜராத் உள்ளாட்சித் தேர்தல்: மாநகராட்சிகளில் பா.ஜ.க, கிராம பகுதிகளில் காங். வெற்றி!
அகமதாபாத்: குஜராத்தில் ஆளும் பா.ஜ.வுக்கு பெரும் சவாலான உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளிலும் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. ஆனால் மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
குஜராத் மாநிலத்தில் பா.ஜ.க. வாக்காளர்களாக இருந்த படேல் சமூகத்தினர், இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டை ஒழி என்ற கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஹர்திக் படேல் தலைமையிலான இக்கிளர்ச்சியை பா.ஜ.க. அரசு கடுமையாக ஒடுக்கியது. ஹர்திக் படேல் உள்ளிட்ட படேல் சமூகத்தினர் மீது தேசத் துரோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டு நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. அரசு அச்சப்பட்டு ஒத்தி வைக்க முயன்றது. ஆனால் அம்மாநில உயர்நீதிமன்றம் சாட்டையடி கொடுத்து தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதன்படி பல கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
நகரங்களில் பா.ஜ.க.
பாரதிய ஜனதா கட்சி மாநகராட்சிகளில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. அகமதாபாத், வதோரா, ராஜ்கோட், ஜாம்நகர், பாவ்நகர் மாநகராட்சிகளில் பா.ஜ.க. முன்னிலையில் உள்ளது. சூரத்தில் பா.ஜ.க- காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த சூரத் படேல்கள் ஆதிக்கம் உள்ள பகுதி. பாவ்நகரில் பா.ஜ.க. மேயர் பாபு சோலங்கி தோல்வியைத் தழுவினார்.
மாவட்ட, தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸ்
ஆனால் மாவட்டம் மற்றும் தாலுகா பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இது பா.ஜ.கவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மொத்தம் உள்ள 31 மாவட்ட பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் 14; பா.ஜ.க. 13ல் முன்னிலை வகித்து வருகிறது. பாவ்நகர் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றும் நிலையில் மாவட்ட பஞ்சாயத்தை காங்கிரஸ் கைப்பற்றிவிட்டது. பாவ்நகர் மாவட்டத்தில் கோகா, ஷிகோர், உம்ராலா, வல்லாபிபூர், கரியாதார் ஆகிய தாலுகா பஞ்சாயத்துகள் காங்கிரஸ் வசமாகி உள்ளன.
ராஜ்கோட்டில் காங்.
அதேபோல் ராஜ்கோட் மாவட்டத்தில் ஜஸ்தான், கோண்டல், ஜேத்பூர், தோராஜி, வின்சியா, பதாதரி, லோதிகா, உப்லெதா தாலுகா பஞ்சாயத்துகளையும் காங்கிரஸ் அள்ளியுள்ளது. ராஜ்கோட் மாவட்ட பஞ்சாயத்து பா.ஜ.க. வசம் இருந்தது.
படேல்கள் அதிகம் உள்ள மோர்பியில் 5 தாலுகா பஞ்சாயத்துகளில் 4-ல் காங்கிரஸ் வென்றுள்ளது.
காந்திநகரில் காங்.
காந்திநகர், ஜூனாகத், தபி, போடாட் ஆகிய மாவட்ட பஞ்சாயத்துகளையும் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.
மோடியின் மாவட்டத்தில் காங்.,
பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாவட்டமான மெக்சனாவில் நகராட்சி மற்றும் தாலுகா பஞ்சாயத்தை காங்கிரஸ் கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது.
தற்போதைய நிலையில் பெருநகரங்களில் மட்டும் பா.ஜ.க. வெல்ல முடிந்துள்ளது. இதர பகுதிகளில் காங்கிரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.