குஜராத்தில் உச்சகட்ட கொடூரம்- 68 பள்ளி மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை
அகமதாபாத்: குஜராத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை நடத்திய உச்சகட்ட கொடூரம் அரங்கேறியுள்ளது.
குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் (எஸ்.எஸ்.ஜி.ஐ) செயல்பட்டு வருகிறது. பூஜ் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற சுவாமிநாராயண் மந்திர்தான் இக்கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறது.
இக்கல்வி நிறுவனத்தில் பி.காம்,, பி.ஏ., பி.எஸ்.சி ஆகிய படிப்புகள் படிக்கலாம். மொத்தம் 1,500 பேர் இக்கல்வி நிறுவனத்தில் படிக்கின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வரும் 68 மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர்.
இந்த விடுதியில் உள்ள வழிபாட்டு அறை பகுதிக்குள் மாதவிடாய் காலத்தில் மாணவிகள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாதவிடாய் காலங்களில் பிற பெண்களை தொடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை சில மாணவிகள் மீறுவதாகவும் மாதவிடாய் நேரங்களில் கோவில் உள்ள பகுதிகளில் நுழைவதாகவும் கல்வி நிறுவன முதல்வர் ரிதா ரனிங்காவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நடந்த சம்பவங்களை துர்கா என்ற மாணவி கண்ணீர்மல்க கூறுகையில், நாங்கள் வகுப்பறைகளில் இருந்த போது முதல்வர் அழைப்பதாக அனைவரையும் அழைத்துச் சென்றனர். அங்கு வந்த முதல்வர் மிக இழிவாகவும் மோசமான வார்த்தைகளிலும் எங்களை திட்டினார். அப்போது யார் யாருக்கு மாதவிடாய் காலம் என கேட்டார். 2 மாணவிகள் மட்டும் வரிசைகளில் இருந்து விலகி நின்றனர்.
ஆனாலும் இதனை நம்பாத கல்லூரி முதல்வர், மற்ற மாணவிகள் அனைவரையும் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பேராசிரியைகள் முன்னிலையில் உள்ளாடைகளை கழற்றிச் சொல்லி மாதவிடாய் யாருக்கேனும் இருக்கிறதா? என சோதனை செய்தனர் என்றார். இதேபோல் ஷக்தி என்ற மாணவி கூறுகையில், மாதவிடாய் பிரச்சனையை முன்வைத்து கல்லூரி முதல்வர், கல்லூர் டிரஸ்டி பிரவீன் பிந்தோரா உள்ளிட்டோர் மிக மோசமாக நடந்து கொள்கின்றனர். மாதவிடாய் காலத்துக்காக மிகவும் தண்டிக்கப்பட்டிருக்கிறோம் என்றார்.
இதனிடையே தங்களது கல்வி நிறுவனத்தில் அப்படி ஒரு சம்பவமே நடகக்வில்லை என கல்லூரி அறக்கட்டளை நிர்வாகி பிரவீன் பிந்த்ரோ மாணவிகளிடம் கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.