குஜராத்தில் பயங்கரம்.. தாய், மகள் படுகொலை.. உடலை 14 மூட்டை சிமெண்ட் போட்டு மூடிய கொடுமை!
அகமதாபாத்: குஜராத் மாநிலம் வதோதராவில் மூன்று வயது குழந்தை மற்றும் அவரது தாயை கொடூரமாக கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மன்சூ பாபரோ என்ற பெண்ணும் அவரது கணவர் திலிப் என்பவரும் சேர்ந்து இந்த கொலைகளை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த 17 ம் தேதி, நந்தா சிசோடியா (48) என்ற பெண் தனது மூன்று வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அதன் பின் அவர் வீடு திரும்பவில்லை இதனைத் தொடர்ந்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், லிம்கேடா பகுதி அருகே உள்ள ஹடாப் ஏரிப் பகுதியில் மூன்று வயது சிறுமியின் உடல் கிடந்தது தெரியவந்தது.
இதற்கிடையே, அப்பகுதியில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில், மன்சூ பாபரோ - திலிப் ஆகியோரது வீட்டிற்கு தாய் மற்றும் மகள் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் நடத்திய கிடுக்குபிடி விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
அவர்கள் அளித்த தகவலின் படி, தாய் நந்தா சிசோடியாவின் உடலை மிகக் கொடூரமாக புதைத்துள்ளனர். அதாவது ஒரு வாட்டர் டேங்க்கில் உடலைப் போட்டு அதன் மேலே 14 மூட்டை சிமெண்ட்டைக் கொட்டி பூசி விட்டனர். உடல் துர்நாற்றம் வெளியே வராமல் இருக்க இவ்வாறு செய்துள்ளனர்.
போலீஸார் அந்த இறுகிப் போன கான்க்ரீட்டை உடைத்து பெண்ணின் உடலை வெளியே எடுத்தனர். எதற்காக இந்தக் கொடூரக் கொலை என்று தெரியவில்லை.