குஜராத்தில் ஆணவக்கொலை: சாதி மாறி திருமணம் செய்த இளைஞன்... வெட்டி சாய்த்த கும்பல்
கர்ப்பிணி மகளின் கணவன் என்றும் பார்க்காமல் இளைஞர் ஒருவரை வெட்டி சாய்த்து ஆணவக்கொலை செய்துள்ளனர். குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அகமதாபாத்: சாதி ஆணவக்கொலைகள் நாடு முழுவதும் அரங்கேறி வருகின்றன. சாதி மாறி திருமணம் செய்த கர்ப்பிணி பெண்ணை கொல்வது, குழந்தை பிறந்த பெண் என்றும் பார்க்காமல் அடித்துக்கொல்வது போன்ற சம்பவங்கள் நடந்து சில வாரங்களே ஆன நிலையில் இரு தினங்களுக்கு முன்பு உயர்ஜாதி பெண்ணை திருமணம் செய்த தலித் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணின் குடும்பத்தினரால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் பெயர் ஹரேஷ் சோலங்கி என்பதாகும். இவர் மண்டல் தாலுகாவில் உள்ள வார்மர் கிராமத்தைச் சேர்ந்த ஊர்மிளா பென் என்பவரை காதலித்தார். இந்த காதல் அரசல் புரசலாக வெளியே தெரிய ஆரம்பித்தது. ஹரேஷ் பெற்றோர்கள் இந்த காதலுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் ஊர்மிளாவின் பெற்றோர் கடுமையாக எதிர்த்தனர். காரணம் அவர்கள் குஜராத்தில் உள்ள உயர்ஜாதி குடும்பத்தைச் சேர்ந்தவர்.
பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சில மாதங்களுக்கு முன் காதலன் ஹரேஷின் கரம் பிடித்தார் ஊர்மிளா. திருமணம் முடிந்த கையோடு கட்ச் மாவட்டத்தில் உள்ள காந்திதாம் கிராமத்திற்கு சென்று குடும்பம் நடத்தினர். மகிழ்ச்சியாகவே வாழ்க்கை நகர்ந்தது. ஊர்மிளா இரண்டு மாதங்களில் கர்ப்பமானார்.
ஊர்மிளாவை பார்க்க அவரது குடும்ப உறுப்பினர்கள் வந்தனர். கர்ப்பிணி பெண்ணை சில மாதங்கள் அம்மா வீட்டிற்கு அழைத்துப் போய் வைத்திருக்கிறோம் என்று கேட்கவே சோலங்கியும் மகிழ்ச்சியாகவே அனுப்பி வைத்தார். வார்மர் கிராமத்தில் உள்ள அப்பாவின் வீட்டிற்கு போன ஊர்மிளாவிற்கு வீட்டு சிறைதான் கிடைத்தது. கணவனுடன் போனில் கூட பேச முடியாத நிலை ஏற்பட்டது.
மனைவியுடன் பேச முடியவில்லையே அவளுக்கு என்ன ஆனதோ என்று கவலைப்பட்ட ஹரேஷ், எப்படியாவது தனது வீட்டிற்கு அழைத்து வந்து விட வேண்டும் என்று நினைத்து 181 அபயம் உதவி நிலையத்தினை நாடினார். அவர்களின் பாதுகாப்புடன் அவர்களின் வாகனத்திலேயே திங்கட்கிழமை இரவு வார்மர் கிராமத்திற்கு சென்றார். அங்கு சென்று அவர் வாகனத்திற்குள் அமர்ந்திருந்த போது, அபயம் குழுவில் இருந்த பாதுகாப்பு பெண்கள் ஊர்மிளாவின் பெற்றோரிடம் பேசினர்.
சொந்தக்காரன்தானேன்னு நம்பி வீட்டுக்குள்ள விடாதீங்க - சிறுமிகளுக்கு நேர்ந்த விபரீதம்
ஹரேஷ் வாகனத்திற்குள் இருப்பதை தெரிந்து கொண்ட ஊர்மிளாவின் பெற்றோர்களும் உறவினர்களும் ஆத்திரமடைந்தனர். கத்தி, அரிவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை கையில் வைத்துக்கொண்டு கோபத்தோடு வந்து வாகனத்தை தாக்கினர். ஹரேஷை வெளியே இழுத்துப்போட்டு தலையிலும் உடம்பிலும் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஹரேஷ் சோலங்கி ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார். அவர் போன அபயம் வாகனமும் கடுமையாக சேதமடைந்திருந்தது. தப்பி ஓடிய அபயம் பெண்கள், போலீசில் புகார் அளித்தனர்.
எட்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஊர்மிளாவின் பெற்றோர், உறவினர்கள் 8 பேரை கைது செய்துள்ளனர். சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அகமதாபாத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதுமே ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன. உயர்சாதியினர் மட்டுமல்ல தலித் சமூகத்திலேயே சாதி ஆணவக்கொலைகள் நடைபெறுவது அதிகரித்து வருகிறது. இன்னும் எத்தனை ஆணவக்கொலைகளை இந்த நாடு பார்க்கப் போகிறதோ.