என்னா மனுஷன்பா... ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி போனஸாக தரும் வைர வியாபாரி!
அஹமதாபாத் : சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி தனது ஊழியர்களுக்கு 600 கார்களை தீபாவளி போனஸாக வழங்குகிறார். ஊழியர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இதனை செய்து வருவதாக வியாபாரி சாவ்ஜி டோலாகியா கூறியுள்ளார்.
குஜராத் மாநில்ம சூரத் நகரில் ஸ்ரீ ஹரி கிருஷ்ணா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருக்கிறார் தொழிலதிபரும் வைர வியாபாரியுமான சாவ்ஜி டோலாகியா. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகையின் போதும் தனது வைர வியாபார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வீடு, கார், வங்கியில் வைப்புத்தொகை, வைர நகைகள் உள்ளிட்டவற்றை போனஸாக அளிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இவருடைய நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 600 ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கார்களை வழங்க முடிவு செய்துள்ளார் சாவ்ஜி. மாருதி சுசுகி மற்றும் சாலினோ வகை கார்களை ஊழியர்களுக்கு பரிசளிப்பதற்காக இவர் வாங்கியுள்ளார். இந்த ஆண்டு புதிய நடைமுறையாக 2 பெண் ஊழியர்கள் உள்பட 4 பேருக்கு பிரதமர் நரேந்திர மோடி போனஸ் பரிசாக அளிக்க உள்ள கார்களின் சாவிகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வைரநகைகளை பிரிப்பது, செதுக்குவது உள்ளிட்ட பணிகளை கற்று அவர்கள் சிறப்பாக பணியாற்றுவதாலேயே எங்கள் நிறுவனம் லாபம் பெற முடிகிறது. எனவே ஊழியர்களை ஊக்கப்படுத்துவது அவசியம் என் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பரிசுகளை போனஸாக வழங்கி வருவதாக சாவ்ஜி டோலாகியா கூறியுள்ளார்.