குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு ரூ.100 கோடியில் விமானம் வாங்கும் மாநில அரசு
காந்திநகர்: குஜராத் முதல்வர் ஆனந்திபென் பட்டேல் பயணம் செய்ய ரூ.100 கோடி செலவில் சிறிய ரக விமானம் ஒன்றை அம்மாநில அரசு வாங்க உள்ளது.
குஜராத் முதல்வர் பயன்படுத்தி வரும் ஒன்பது இருக்கைகள் கொண்ட சூப்பர் கிங் ஏர் பீச்கிராப்ட் 200 விமானம் வரும் டிசம்பர் மாதத்துடன் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படுகிறது. இந்த விமானம் 1999ம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வர் கேசுபாய் பட்டேலால் ஏஜெண்ட் ஒருவரிடம் இருந்து ரூ.19.12 கோடிக்கு வாங்கப்பட்டது. அந்த விமானத்தை அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை தான் பயன்படுத்த முடியும் என்று கூறியே விற்பனை செய்யப்பட்டது.
வரும் டிசம்பர் மாதத்துடன் அந்த விமானம் 15 ஆண்டு சேவையை நிறைவு செய்வதால் அதற்கு ஓய்வு கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் அந்த விமானம் பல்வேறு தொல்லைகள் கொடுத்ததால் முதல்வர் தனியார் விமானங்கள் மூலம் பயணம் செய்ய வேண்டி இருந்தது. இந்நிலையில் குஜராத் முதல்வருக்கு என 12 இருக்கைகளுடன் அதிநவீன வசதி கொண்ட விமானத்தை வாங்க வேண்டும் என்று உயர் மட்ட தொழில்நுட்ப குழு பரிந்துரை செய்தது.
அதன் பரிந்துரையின் பேரில் முதல்வர் ஆனந்திபென் பட்டேலுக்கு ரூ.100 கோடி செலவில் புதிய விமானம் ஒன்றை அம்மாநில அரசு வாங்க உள்ளது. முன்னதாக ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி விமான விபத்தில் பலியானதை அடுத்து டிசம்பர் மாதத்துடன் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்படும் குஜராத் முதல்வரின் விமானத்திற்கு ரூ.10.85 கோடி செலவில் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.