குஜராத், கர்நாடகாவில் மேகிநூடுல்ஸ் மீதான தடை அதிரடியாக நீக்கம்!
அகமதாபாத்: குஜராத்தில் மேகிநூடுல்ஸ் மீதான தடையை அம்மாநில அரசு அதிரடியாக நீக்கியுள்ளது. இதனை பின்பற்றி பிற மாநிலங்களும் மேகி நூடுல்ஸ் மீதான தடையை விலக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு காரியம் கலந்திருப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மேகிநூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதித்தன.
இதனால் 30,000 டன்கள் எடையிலான மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை சந்தைகளில் இருந்து நெஸ்லே இந்தியா நிறுவனம் திரும்பப் பெற்று அழித்தது.
இந்த தடைக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. இந்த வழக்கில் மேகியின் தரம் குறித்து சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி 6 விதமான மேகி நூடுல்ஸ்களின் 90 மாதிரிகள் இந்த ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் குறிப்பிட்ட அளவை விட சற்றுக் குறைவாகவே மேகி நூடுல்ஸில் காரியம் கலந்திருப்பதாக பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன.
மேலும், நெஸ்லே இந்தியா தனிப்பட்ட முறையில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் 3,500 ஆய்வகங்களில் 20 லட்சம் பாக்கெட்டுகளை ஆய்வு செய்து அனைத்துமே சாதகமாக வந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குஜராத் மாநில அரசு, மேகி நூடுல்ஸ் மீதான தடையை இன்று அதிரடியாக நீக்கியது.
கர்நாடகாவிலும்..
இதேபோல் கர்நாடகா மாநிலத்திலும் மேகிநூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.