யார் யாருக்கு கொரோனா பாதிப்பு... பெயர் உள்ளிட்ட முழு விவரங்களையும் பகிரங்கப்படுத்திய குஜராத் அரசு
வதோதரா: குஜராத் மாநிலத்தில் யார் யாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்கிற விவரங்களை முழுமையாகவே பகிரங்கப்படுத்தியுள்ளது குஜராத் மாநில அரசு.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200ஐ எட்டியுள்ளது. நாட்டில் மகாராஷ்டிராவில்தான் அதிக பாதிப்பு இருக்கிறது.
கொரோனா தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறவர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்படுகின்றனர்; அரசு கண்காணிப்பின் கீழும் கொண்டு வரப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்படுகிற நபர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டும் இருக்கிறது.
இதுதான் கொரோனாவுடன் தொடர்புடையார் குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் அதிகபட்ச விவரம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் யார் பெயரையும் வெளியிடுவதில்லை என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பிலும் கூட இறந்தவர்கள் பெயரை குறிப்பிடவும் கூட தமிழக அரசு அனுமதிப்பது இல்லை.
ஆனால் குஜராத் அரசோ கொரோனா தொடர்புடையவரின் முழு சரித்திரத்தையே பகிரங்கமாக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. நோயாளியின் பெயர், வயது, முகவரி, மாவட்டம், எந்த மருத்துவமனையில் சிகிச்சை, பரிசோதனை முடிவு நாள், தற்போதைய நிலைமை, பயணங்கள் குறித்த விவரங்கள் என அனைத்தையும் ஊடகங்கள் மூலம் குஜராத் அரசு பகிரங்கப்படுத்தியுள்ளது பெரும் சர்ச்சையாகி உள்ளது.