2002 நரோடா பாட்யா கலவர வழக்கில் இருந்து மாஜி பாஜக அமைச்சர் மாயா கோட்னானி விடுதலை!
குஜராத்தின் நரோடா பாட்யா கலவர வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்ட முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி ஹைகோர்ட்டால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அஹமதாபாத் : குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு நடந்த நரோடா பாட்யா கலவர வழக்கில் இருந்து முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 2002-ல் மூண்ட கலவரத்தில் நரோடா பாட்யா என்ற இடத்தில் 97 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து 82 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அஹமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்களில் ஒருவரான மாயா கோட்னானி பெயரும் இடம்பெற்றது.
அஹமதாபாத்தின் நரோடா பாட்யாவில் நடந்த மோசமான கலவரமாக இது அமைந்தது. கடந்த பிப்ரவரி 28ம் ஆண்டு மஹாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் இருந்து புலம் பெயர்ந்த 97 முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் நடத்திய இந்த போராட்த்தில் சுமார் 800 வீடுகள் தீக்கு இறையாக்கப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் 2012ல் சிறப்பு புலனாய்வு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் முன்னாள் பாஜக அமைச்சர் மாயா கோட்னானி உள்ளிட்ட 32 பேருக்கு 28 ஆண்டுகள் ஆயுள் தண்டனைவிதித்து உத்தரவிட்டது. கோட்னானிக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், முன்னாள் பஜ்ரங்கதள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
கலவரத்தை தூண்டியதாகவும் அதற்கு மூளையாக செயல்பட்டதாகவும் மாயா கோட்னானி குற்றம்சாட்டப்பட்டார். இந்நிலையில் குஜராத் ஹைகோர்ட் மாயா கோட்னானி, பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 29 பேரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது, போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்படாததை காரணமாக காட்டி அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.