கோத்ரா ரயில் எரிப்பு மேல்முறையீடு வழக்கு: 11 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த ஹைகோர்ட்
குஜராத்தில் நடத்தப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இன்று ஹைகோர்ட் தீர்ப்பு வழங்குவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அகமதாபாத்: குஜராத்தின் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் எரிப்பு சம்பவத்தில் 11 பேரின் மரண தண்டனையை ஹைகோர்ட் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அயோத்தியில் இருந்து வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் எஸ்.6 பெட்டி மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்கள் 59 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இந்த ரயில் எரிப்பு சம்பவத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் மூண்டது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டது. விசாரணை முடிவில், குற்றம்சாட்டப்பட்ட 63 பேர் விடுதலை செய்யப்பட்டனர். முக்கிய குற்றவாளிகளாக கருதப்பட்ட மௌலானா உமர்ஜி, கோத்ரா நகராட்சித் தலைவர் முகமது உசைன் கலோட்டா, முஹமது அன்சாரி மற்றும் உத்திர பிரதேச மாநலிம் கங்காபூரைச் சேர்ந்த நானுமியா சௌதாரியும் விடுவிக்கப்பட்டனர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் என 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்து தண்டனை விதித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக தண்டனைப் பெற்றவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். இதே போன்று மாநில அரசின் சார்பிலும் விடுவிக்கப்பட்டவர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை முடிந்து குஜராத் ஹைகோர்ட் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பின் போது சிறப்பு நீதிமன்றம் 11 பேருக்கு அளித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் குற்றவாளிகளின் தண்டனைக் காலம் குறைக்கப்பட்டுள்ளதை அரசியல் கட்சியினர் எப்படி கையாளப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.