குஜராத் கலவரத்தில் கணவர் பலி.. மோடிக்கு எதிராக தொடர்ந்து நீதி போராட்டம் நடத்தும் ஜாகியா!
குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விவரம் இதுதான்.
காந்திநகர்: கோத்ரா கலவரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் எம்.பி மனைவி ஜாகியா ஜாப்ரியால் தொடரப்பட்ட வழக்கை குஜராத் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த 2002 பிப்ரவரி 27-ம் தேதி குஜராத் மாநிலம், கோத்ரா ரயில் நிலையத்துக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து குஜராத் முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக புகார் எழுந்தது. மாநிலம் முழுவதும் கலவரம் பரவியதில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
குல்பர்க் சொசைட்டி கொலை
குல்பர்க் பகுதியில் கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் 69 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் இசான் ஜாப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பியும் கொல்லப்பட்டார்.
மோடிக்கு தொடர்பு
கலவரத்தில் மோடிக்கு பெரும் பங்கு உண்டு எனக் கூறி இசான் ஜாப்ரியின் மனைவி ஜாக்கியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தது. அதை கீழமை கோர்ட் தள்ளுபடி செய்தது. எனவே தீர்ப்பை எதிர்த்து இந்தக் கலவரத்தில் பிரதமர் மோடிக்கு பெரும் பங்கு உண்டு எனக் கூறி ஜாப்ரி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் குஜராத் ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்
குஜராத் கலவரத்தில் பெரும் சதியில்லை என்றும் நீதிபதி சோனியா கோகனி இன்று தீர்ப்பளித்துள்ளார்.மேலும் தீர்ப்பை எதிர்த்து ஜாப்ரி சுப்ரீம் கோர்ட்டை அணுகலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
தண்டனைக் கிடைக்க வேண்டும்
குஜராத் நீதிமன்ற தீர்ப்பால் அதிர்ச்சி தெரிவித்துள்ள ஜாப்ரி தன் கண்முன்னே நடந்தது இனப்படுகொலை என்றும், கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களையும் அடியோடு அழித்தனர் என்று கூறியுள்ளார். இதில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஜாப்ரி தெரிவித்துள்ளார்.