14 வயது சிறுமியை விரட்டி.. துரத்திய சிங்கம்.. குஜராத்தில் படுபயங்கரம்!
அஹமதாபாத்: குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் வனப்பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை சிங்கம் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்தியாவில குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் பெரிய அளவில் உள்ளன. அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, சிங்கங்களை அரசு பாதுகாத்து வருகிறது.
கிர் காடுகளில் சர்வ சாதாரணமாக சுற்றும் சிங்கங்களை அந்த பகுதியில் உள்ள வனப்பகுதி மக்களுக்கு பெரிய அச்சுறுத்தலை இதுவரை தந்தது இல்லை.
இந்நிலையல் ஜூனாகத் மாவட்டத்தின் வந்தாலி பகுதியில் பண்ணையில் வேலை செய்த இரண்டு சிறுமிகள் வனப்பகுதி வழியாக வந்துள்ளார்கள். அப்போது அந்த வழியில் இருந்த சிங்கம் ஒன்று இரண்டு சிறுமிகளை துரத்தியது. இதில் ஒரு சிறுமி துரிதமாக செயல்பட்டு அருகில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் குதித்து உயிர் தப்பினார்.
ஆனால் மற்றொரு சிறுமியான பவானப்பிரியாவை சிங்கம் கடித்து இழுத்துச் சென்றது. தகவல் அறிந்த வனத்துறையினர், அந்த பகுதிக்கு சென்று தேடினர். அப்போது சிறுமியின் உடல் பாகங்கள் சிதறி கிடந்தன. சிறுமி சிங்கம் தாக்கி உயிரிழந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.