காணாமல் போன தாயுடன் 2 ஆண்டுக்கு பின் சேர்ந்த மகன்.. அன்னையர் தினத்தில் நிகழ்ந்த அதிசய சம்பவம்!
இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன மூதாட்டி, அன்னையர் தினத்தன்று தனது மகனிடம் சென்று சேர்ந்திருக்கிறார்.
காந்திநகர்: இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தாய், அன்னையர் தினத்தன்று தனது மகனிடம் சென்று சேர்ந்த அதிசய நிகழ்வு அனைவரையும் நெகிழவைத்துள்ளது.
குஜராத் மாநிலம் பரோடாவை சேர்ந்தவர் தேஜஸ் தக்கர். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் வசித்து வந்தார். அப்போது அவரது தாய் ஹர்ஷா தக்கர் திடீரென ஒருநாள் காணாமல் போய்விட்டார்.
76 வயதாகும் ஹர்ஷா தக்கர் மனநிலை சரியில்லாதவர். மேலும் அவருக்கு ஞாபக சக்தியும் கிடையாது. தாய் காணாமல் போனது குறித்து தேஜஸ் தக்கர் காவல்துறையில் புகார் அளித்தார். இருப்பினும் அவரால் தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.
கொரோனா ஊரடங்கு
இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி மகாராஷ்ட்ராவின் தோம்பிவலி மாவட்டத்தில் உள்ள பலவா நகரில் ஹர்ஷா தக்கர் சுற்றித்திரிந்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளித்து வந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் தேஜஸ் தக்கரின் தாயை பார்த்திருக்கின்றனர்.
வேறெதுவும் நினைவில்லை
அவருக்கு தனது பெயரும், மகனின் பெயரும் மட்டுமே நினைவில் இருந்திருக்கிறது. அதைத்தவிர வேறு எதுவும் அவருக்கு ஞாபகம் இல்லை. இதையடுத்து, அந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஹசன் கான் என்பவர் ஹர்ஷா தக்கரை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பராமரித்து வந்திருக்கிறார். மேலும் போலீசாரிடம் ஹர்ஷா பற்றிய முழு விவரங்களை தந்திருக்கிறார் ஹசன்.
சமூகவலைதளங்கள் மூலம் தேடல்
இதையடுத்து சமூகவலைதளங்கள் மூலம் தேஜஸ் தக்கரை தேடும் பணியில் ஹசன் ஈடுபட்டார். இருதினங்களுக்கு முன்பு தேஜஸ் தக்கரின் தொலைப்பேசி எண்ணை கண்டுபிடித்து, அதில் தொடர்பு கொண்ட ஹசன், விஷயத்தை சொல்லி இருக்கிறார். மேலும் வீடியோ கால் மூலம் ஹர்ஷா தனது தாய் தான் என தேஜஸ் உறுதிப்படுத்தினார்.
வெடித்து அழுத மகன்
இதையடுத்து போலீசாருக்கு விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் முன்னிலையில் நேற்று அன்னையர் தினத்தன்று தாயும், மகனும் இரண்டு ஆண்டுகள் கழித்து சேர்ந்தனர். தாயை பார்த்ததும் தேஜஸ் வெடித்து அழுதுவிட்டார்.
நெஞ்சார்ந்த நன்றி
தொலைந்து போன தனது தாயை கண்டுபிடித்து தந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஹசன் கான் உள்ளிட்டோருக்கு தேஜஸ் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொண்டார். மனதை நெகிழச் செய்யும் இந்த சம்பவம் அன்னையர் தினத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.