ராணுவத்தின் வலிமையை சித்தரிக்கும் விதமான சேலை... விற்பனை அமோகம்
சூரத்: ஜம்மு காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிஆர்பிஎப் வீரர்களின் படங்களை சேலையில் அச்சிட்டு விற்பனை செய்து வருகிறது சூரத்தைச் சேர்ந்த ஜவுளி ஆலை.
மேலும், ராணுவ வீரர்கள், தேஜாஸ் போர் விமானம், டாங்கிகளை அச்சிட்டு குஜராத்தில் சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
கடந்த 14-ம் தேதி பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது.
Gujarat: Annapurna Industries Pvt Ltd, a textile mill in Surat, has manufactured a batch of sarees as a tribute to CRPF jawans who lost their lives in #PulwamaAttack. Mills' Director says, "We will donate the entire profit earned, to the families of the martyred jawans." (21.02) pic.twitter.com/uXTJDPm7pA
— ANI (@ANI) February 21, 2019
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த சிஆர்பிஎப் வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். அந்த வகையில், குஜராத்தின் சூரத்தில் இயங்கி வரும், அன்னபூர்ணா இண்டஸ்ட்ரீஸ் என்ற ஜவுளி ஆலை, புல்வாமா தாக்குதலில் வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில், சேலைகளை உற்பத்தி செய்து வருகிறது.
இதுகுறித்து அந்த ஆலையின் இயக்குனர் மணீஷ் கூறியதாவது: இந்திய பாதுகாப்பு படையின் வலிமையை சித்தரிக்கும் நோக்கில் இந்த சேலை வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள், புதிய டாங்கிகள், தேஜாஸ் போர் விமானம் மற்றும் பல்வேறு விதமான போர் வாகனங்களை காட்டியுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. நாடு முழுவதும் இருந்து ஆர்டர்கள் அதிகம் வருகின்றன. இதில், வரும் லாபம் முழுவதையும் ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியாக வழங்க உள்ளோம் என்றார்.