குஜராத்தில் கன மழை.. வதோதரா விமான நிலையம் மூடல்.. பல ரயில்கள் ரத்து
காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. வதோதரா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பல ரயில்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டுள்ளன.
மத்திய குஜராத்தில் உள்ளது, அம்மாநிலத்தின் முக்கியமான வர்த்தக நகர்களில் ஒன்றான வதோதரா. இங்கு புதன்கிழமை, வெறும் 12 மணி நேரத்தில், அதாவது, காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 442 மிமீ மழை பெய்தது. இதனால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
அந்த நகரத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் நுழைந்ததால், தாழ்வான பகுதிகளைச் சேர்ந்தவர்களை இடம்பெயர வைக்குமாறு மாநில அரசு உள்ளூர் நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டது.
வதோதரா நகரத்தின் வழியாக செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டன, அல்லது திருப்பி விடப்பட்டன. வதோதராவின் நிலைமையை ஆய்வு செய்ய முதல்வர் விஜய் ரூபானி நேற்று மாலையில் அவசர ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தி, மூத்த அதிகாரிகள் வினோத் ராவ் மற்றும் லோகன் செஹ்ரா ஆகியோரை வதோதரா செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.
வதோதரா மாவட்டத்தில் தபோய் நகரத்தில் 152 மிமீ மழையும், பஞ்சமஹால் மாவட்டத்தில் ஹலோலுக்கில் 143 மிமீ மழையும், வதோதரா மாவட்டத்தில் கர்ஜன் (137 மிமீ), வதோதராவில் வாகோடியா (124 மிமீ), சூரத்தில் உமர்பாடா (118 மிமீ) மற்றும் சோட்டாடேப்பூர் மாவட்டத்தில் சங்கேதா ( 117 மிமீ) மழை பெய்துள்ளது.