குஜராத் ராஜ்யசபா தேர்தல்- அடுத்தடுத்து எம்.எல்.ஏக்கள் ராஜினாமா- விரக்தியில் காங்.
காந்திநகர்: குஜராத் ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் எம்.எல்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவது அக்கட்சி மேலிடத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற்றாலே பாஜகவின் ஆள்பிடி ஆட்டம் இல்லாமல் இருக்காது. இதற்கு ஒவ்வொரு முறையும் காங்கிரஸ் கட்சி பலிகடாவாகியும் வருகிறது.
அதுவும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் ராஜ்யசபா தேர்தல் இந்தியா முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அகமது படேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். பாஜக வேட்பாளர்களாக அமித்ஷாவும் ஸ்மிருதி இரானியும் போட்டியிட்டனர். பாஜக 3-வது வேட்பாளராக பல்வந்த்சிங் ராஜ்புத்தை நிறுத்தியது. அமித்ஷா, ஸ்மிருதி இரானி வெற்றி உறுதியாகி இருந்தது.
கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்- காங். வேட்பாளராக மல்லிகார்ஜூன கார்கே போட்டி
களத்தில் சிவகுமார்
காங்கிரசின் அகமது படேல் எப்படியும் வெற்றி பெறக்கூடாது என்பதில் மட்டும் பாஜக மும்முரமாக இருந்தது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டது பாஜக. காங்கிரஸ் கட்சியோ எப்படியும் அகமது படேலை ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. அப்போதுதான் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் களத்துக்கு வந்தார்.
சிவகுமார் மீது பாஜக கோபம்
அகமது படேலை வெற்றி பெற வைக்க வேண்டிய 44 எம்.எல்.ஏக்களையும் அழைத்துக் கொண்டு பெங்களூரு பறந்தார் சிவகுமார். ராஜ்யசபா தேர்தல் முடியும் வரை அந்த எம்.எல்.ஏக்களை பாதுகாத்தவரும் சிவகுமார்தான். பின்னர் ராஜ்யசபா தேர்தல் நேரத்திலும் ஏகப்பட்ட அக்கப்போர்கள்- ஒருவழியாக அகமது படேல் வென்றார். பாஜக நிறுத்திய 3-வது வேட்பாளர் பல்வந்த்சிங் ராஜ்புத் தோற்றார். காங்கிரஸ் தலைவர் சிவகுமார் மீதான பாஜகவின் அந்த கோபம் இப்போதும் நீடிக்கிறது.
ஜூன் 19-ல் தேர்தல்
இந்த நிலையில் தற்போது கொரோனாவால் ராஜ்யசபா தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து வரும் 19-ந் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. குஜராத் சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பாஜகவுக்கு 3 எம்.பிக்கள், காங்கிரஸுக்கு 2 எம்.பிக்கள் தேர்வாகக் கூடும் என நிலைமை இருந்தது.
காங். எம்.எல்.ஏக்கள் ராஜினாமா
ஆனால் புதிய திருப்பங்களாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருகின்றனர். ஏற்கனவே 5 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்திருந்தனர். தற்போது மேலும் 3 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டனர். இவர்களது ராஜினாமாக்களை சபாநாயகரும் ஏற்றுக் கொண்டுவிட்டார். இதனால் குஜராத் ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் 1 எம்.பி. பதவியைத்தான் பெற முடியும் என்கிற நிலைமை உள்ளது.