ராஜ்யசபா தேர்தல்.. பாஜக நெருக்கடிக்குப் பணியாத தேர்தல் ஆணையம்.. நள்ளிரவில் நடந்த பரபர திருப்பங்கள்!
அமித்ஷா தேர்தல் ஆணையத்தின் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து நெருக்கடி கொடுத்தும் தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு அடிபணியவில்லை. இதனால் குஜராத் ராஜ்ய சபா தேர்தலில் பரபரப்பான திருப்பங்கள் நள்ளிரவில் நடைபெற்றன
டெல்லி: குஜராத் மாநில ராஜ்ய சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு வாக்களித்தனர்.
குஜராத் மாநில ராஜ்ய சபா தேர்தல் ஆகஸ்டு 8ம் தேதி நடைபெற்றது. இதில் 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி பாஜகவிற்கு வாக்களித்தனர். இதனால் இந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் 2 வாக்குகள் செல்லாததது என அறிவிக்க வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அளித்த 2 வாக்குகளையும் செல்லாததது என்று அறிவிக்கக் கூடாது என்று அருண் ஜெட்லி தேர்தல் ஆணையத்திடம் முறையீடு செய்தார். மேலும், நிர்மலா சீதாராமன், முக்தர் அப்பாஸ் உள்ளிட்டவர்களும் தேர்தல் ஆணையரைச் சந்தித்து கடும் நெருக்கடியைக் கொடுத்தனர். இதனால் வாக்கு எண்ணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டு தாமதம் ஆனது.
இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே சென்று, பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா, தேர்தல் ஆணையத்தின் வாசலில் நாற்காலி போட்டு அமர்ந்து கொண்டு பெரும் நெருக்கடியைக் கொடுத்தார். எப்படியாவது தங்களுக்கு சாதகமாகத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்த்திருந்த பாஜகவின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது தேர்தல் ஆணையம்.
அதாவது, காங்கிரஸ் கட்சியின் 2 எம்எல்ஏக்களும் ரகசிய வாக்கெடுப்பு விதியை மீறி வாக்களித்துள்ளனர் என்பதை, எம்எல்ஏக்கள் இருவரும் வெளியே வந்து சொன்ன வீடியோவை பரிசீலித்து, வாக்குகளை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
இதனைத் தொடர்ந்து, வாக்குகள் எண்ணும் பணி தொடங்கிய நடைபெற்றது. மோடியின் குஜராத் மாநிலம் என்பதால் அமித்ஷா, இதை மானப் பிரச்சினையாக எடுத்து சற்று ஓவராகவே போனார். பின்னர் அதற்கான அவமானத்தையும் தேர்தல் ஆணையம் அறிவிப்பால் சந்தித்தார் என்றால் மிகையல்ல.
மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது நடுநிலையாளர்களால் வரவேற்கப்படுவதை சமூக தளங்களில் பார்க்க முடிந்தது.