குஜராத்தில் ஓ.பி.சி. பட்டியலில் சேர்க்க கோரி படேல் வகுப்பினர் கிளர்ச்சி... தலையிடுகிறது ஆர்.எஸ்.எஸ்
அகமதாபாத்: குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓ.பி.சி) சேர்க்கக் கோரி படேல் வகுப்பினர் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெருக்கடியில் சிக்கியிருக்கும் குஜராத் அரசைக் காப்பாற்றுவதற்காக படேல் சமூகத்தினருடன் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சமாதான பேச்சுவார்த்தைகளை நடத்த முன்வந்துள்ளது.
குஜராத்தில் பெரும்பான்மையாக உள்ள படேல் சமூகத்தினர் முற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். ஆனால் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது படேல் சமூகத்தினர் கோரிக்கை.
இதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக படேல் சமூகத்தினர் தீவிரமாக போராடி வருகின்றனர். இதன் ஒருகட்டமாக இன்று சுமார் 25 லட்சம் பேர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணியை அகமதாபாத்தில் நடத்தப் போவதாக படேல் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இப்போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் படேலை குஜராத் அரசு நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால் தமது பிரதிநிதிகள் 3 பேரை ஹர்திக் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தார்.
7 அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் படேல் சமூகத் தலைவர்களுடன் அகமதாபாத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தக் கூட்டத்துக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சர் நிதின் படேல் தலைமை வகித்தார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த அமைச்சர் நிதின் படேல், படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்ற அரசின் நிலைப்பாட்டை சமூகத் தலைவர்களிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகக் கூறினார். இதனால் படேல் சமூகத்தினர் கொந்தளித்து போயுள்ளனர்.
இது குஜராத் அரசுக்கு மிகப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் படேல் சமூகத் தலைவர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் முன்வந்துள்ளது.
இது குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் ஜெயின் கூறுகையில், எங்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் படேல் சமூகத்தினரின் போராட்டம் குறித்து விவாதித்தோம்.
இந்த விஷயத்தில் சுமுக தீர்வு ஏற்படுவதற்கு எங்கள் அமைப்பு முயற்சிக்கும். ஏனெனில், சமூக நல்லிணக்கமும், ஒற்றுமையும் காப்பாற்றப்பட வேண்டும் என்றார்.