குஜராத்தில் ராகுல் காந்தியை 'பப்பு' என விமர்சித்த பா.ஜ.க. விளம்பரத்திற்கு தேர்தல் ஆணையம் தடை
குஜராத்தில் பா.ஜ.க தேர்தல் விளம்பரத்தில் இருந்த ’பப்பு’ என்கிற வார்த்தையை தடை செய்தது தேர்தல் ஆணையம்
காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தயாரித்த விளம்பரப்படத்தில் 'பப்பு' என்கிற வார்த்தையை நீக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் தேர்தல் நடக்க உள்ளது. இங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்த தயாரிக்கப்பட்டுள்ள பா.ஜ.க விளம்பரம் ஒன்றில் 'பப்பு' என்கிற வார்த்தையை தடை செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
'பப்பு' என்கிற வார்த்தை பா.ஜ.க.,வினரால் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியைக் குறிக்க பயன்படுத்திவருகிறார்கள். அது ஒரு தரக்குறைவான சொல். அது தேர்தல் விளம்பரங்களில் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்கு பதில் வேறு வார்த்தையை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தி உள்ளார்கள்.
இதுகுறித்து பா.ஜ.கவினர், தேர்தலின் போது விளம்பரங்களை தேர்தல் ஆணையத்திடம் காட்டி அனுமதி வாங்குவது வழக்கம். அவர்கள் அதில் இருந்த பப்பு என்கிற வார்த்தையை நீக்க சொன்னார்கள். அதில் எந்த ஒரு தனிப்பட்ட நபரையோ, கட்சியையோ குறிக்கும் தொனியில் இல்லை. இதுகுறித்து நாங்கள் மறுபரிசீலனை செய்ய அதிகாரிகளைக் கேட்டு இருக்கிறோம். அவர்கள் மறுக்கும் பட்சத்தில் அந்த வார்த்தையை நீக்கி விட்டு வேறு வார்த்தையை பயன்படுத்துவோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
குஜராத்தில் வரும் டிசம்பர் மாதம் 9ம் தேதி மற்றும் 14ம் தேதியில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. தேர்தலின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18ம் தேதி நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.