குஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு!
காந்திநகர் : சூரத் நகரில் டியூசன் சென்டரில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் 4 அடுக்குகளை கொண்ட வணிக வளாகத்தின் மேல் தளத்தில் டியூஷன் சென்டர் ஒன்று செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனால் அலறிய மாணவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என மாடியில் இருந்து குதித்தனர். அவர்களில் பலரை கீழே இருந்தவர்கள் காப்பாற்றினர்.
சில மாணவர்கள் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்து 19 வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.
இருப்பினும் இதில் நேற்றே 17 மாணவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தேசிய இனங்கள்... இந்திய அளவில் 'தமிழ்நாடு வியூகம்'.. ஸ்டாலினின் அடடே கடிதம்!
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவர்களில் மேலும் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதனிடையே குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே சூரத் வணிக வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.