குஜராத்தி என்.ஆர்.ஐ.கள் இந்திய வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வது ரூ9,890 கோடி குறைந்தது!!
அகமதாபாத்: வெளிநாடு வாழ் குஜராத் மாநிலத்தவர் வங்கிகளில் டெபாசிட் செய்கிற பணத்தின் அளவு ரூ9,890 கோடி அளவுக்கு குறைந்து போயுள்ளதாம்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ.) குஜராத் மாநில தனியார் வங்கிகளில் பெருமளவு பணத்தை டெபாசிட் செய்வது வழக்கம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதியன்று ரூ59,612 கோடியை அவர்கள் டெபாசிட் செய்திருந்தனர்.
ஆனால் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதியன்றோ குஜராத்தி என்.ஆர்.ஐ.கள் டெபாசிட் செய்த தொகை ரூ49, 722 கோடி மட்டுமே.
மொத்தம் இந்த காலாண்டுப் பகுதியில் மட்டும் ரூ9,890 கோடி குறைந்து போயுள்ளது என்கிறது மாநில அளவிலான வங்கிகள் குழுவின் அறிக்கை.
குறிப்பாக ஆக்சிஸ் வங்கியில் செப்டம்பர் மாதம் டெபாசிட் செய்யப்பட்டது ரூ6,550.35 கோடி. ஆனால் டிசம்பரிலோ வெறும் ரூ5.7 கோடிதானாம்.
இதேபோல் ஐ.சி.ஐ.சி. வங்கியிலும் ரூ1,987 கோடி அளவுக்கு டெபாசிட் தொகை குறைந்து போயுள்ளதாம்.
இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் வர்த்தக நிபுணர்கள், குஜராத்தி என்.ஆர்.ஐ.களில் பலர் வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றியிருப்பதும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த தொகை குறைந்து போயிருக்கலாம். தற்போது ரூபாய் மதிப்பு நிலையாக இருந்து வருகிறது. இது புதிய டெபாட்சிட்டுகள் கிடைக்க வழிவகுக்கும் என்கின்றனர்.