குஜராத்திகள் பொய்யர்கள்- முலாயம் பேச்சு! பாஜக, பகுஜன் கடும் கண்டனம்!!
டெல்லி / லக்னோ : குஜராத்திகள் பொய்யர் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.
லக்னோவில் நேற்று நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பேசிய முலாயம்சிங் யாதவ், பிரதமர் மோடியை விமர்சிக்கும் போது பொய்யர் என்று கூறியிருந்தார்.
அத்துடன் பெண்கள் மேம்பாடு பற்றி பேசுகிற அவர் தன் மனைவியை ஏன் தனியே விட்டுவிட்டார் என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தார். முலாயம்சிங்கின் இந்தப் பேச்சுக்கு பாரதிய ஜனதா மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பாஜகவின் அமித் பத்ரா கூறுகையில், ஒரு மூத்த தலைவரின் பேச்சு இப்படி இருக்காது. முலாயம் ஒரு மூத்த தலைவர்தானா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார். பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான ஜிவிஎல் நரசிம்ஹ ராவும் முலாயம் கருத்தை விமர்சித்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் சுதீந்தர படோரியா, முலாயமின் இந்த கருத்து அவர் ஒரு குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகிறது. குஜராத்தியரோ, மராத்தியரோ, தமிழரோ எந்த ஒரு மக்களையும் இப்படியெல்லாம் விமர்சிக்கக் கூடாது என்றார்.