ராஜஸ்தானில் மீண்டும் வெடிக்கிறது குஜ்ஜார் இன மக்களின் போராட்டம்... காங்கிரஸ் அரசுக்கு குடைச்சல்..!
ஜெய்ப்பூர்: கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் இன மக்கள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு கோரி கடந்த 2007-ம் ஆண்டு முதல் கோரிக்கை வைத்து வருகின்றனர் குஜ்ஜார் சமுதாயத்தினர். மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை கவனித்து வரும் இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தில் 20 லட்சம் பேருக்கு மேல் உள்ளனர்.
தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி கடந்த ஆண்டு அவர்கள் நடத்திய போராட்டங்களால் ராஜஸ்தான் மாநிலமே ஸ்தம்பித்து போனது. ரயில் வழித்தடங்கள், சாலைகள் என மிகத் தீவிரமாக அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தின் காரணமாக, குஜ்ஜார் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் ஒரு வருடத்திற்கும் மேலாக அதை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் காட்டுவதால் மீண்டும் போராட்ட எச்சரிக்கை விடுத்திருக்கிறார் குஜ்ஜாட் சமுதாயத் தலைவர் கிரோரி சிங். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ராஜஸ்தான் மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துக்கொள்கிறேன். இப்போது வேண்டுமானால் எங்கள் போராட்டமும், வேண்டுகோளும் அவர்களுக்கு சிறியதாக தெரியலாம். ஆனால் நவம்பர் 1-ம் தேதிக்கு பிறகு நாங்கள் ஒரு முடிவெடுக்க வேண்டியது வரும்''.
''ஆகையால் நவம்பர் 1-ம் தேதி வரை ராஜஸ்தான் அரசுக்கு கெடு விதிக்கிறேன். அதற்குள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித்தர வேண்டும்'' என ஆக்ரோஷம் காட்டியுள்ளார். இதனிடையே சச்சின் பைலட்டுடனான மோதல் முடிவுக்கு வந்ததால் சற்றே நிம்மதியடைந்த ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு இப்போது புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.