ராஜஸ்தானில் இடஒதுக்கீடு போராட்டம்... இன்று குஜ்ஜார் மகாபஞ்சாயத்து கூட்டம்- இணையசேவை துண்டிப்பு!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் ஜாதியினருக்கு இடஒதுக்கீடு கோரி மீண்டும் போராட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக குஜ்ஜார் மகாபஞ்சாயத்து இன்று கூடுவதால் ராஜஸ்தானின் பல பகுதிகளில் இணையசேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் குஜ்ஜார் உட்பட 5 மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 9-வது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை
இந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது குஜ்ஜா ஜாதியினரின் கோரிக்கை. இது தொடர்பாக ஆலோசனை நடத்த குஜ்ஜார் ஜாதியினரின் மகாபஞ்சாயத்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
மக்சுந்தரபுரா தேவ்நாராயண் கோவிலில் இந்த மகாபஞ்சாயத்து கூட்டம் நடைபெறும் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பாரத்புரா பகுதிக்கு இந்த மகாபஞ்சாயத்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் நீண்டகாலமாக இடஒதுக்கீடு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
விவசாய விரோத, இடஒதுக்கீட்டிற்கு எதிரான பாஜக அரசுதான் ஊழல் அதிமுக அரசுக்கு பாதுகாவலன்: மு.க.ஸ்டாலின்
இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறும் பாரத்புராவில் ஏற்கனவே இடஒதுக்கீட்டுப் போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க குஜ்ஜார் ஜாதியினர் பெரும்பான்மையினராக உள்ள பகுதியில் இணையசேவை முடக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் முழுவதும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.