முதலில் காங்., பிறகு பாஜக.. குஜராத் ராஜ்யசபா தேர்தல் வாக்கு எண்ணிக்கையை நிறுத்திய 'கள்ள ஓட்டுக்கள்'
டெல்லி: குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு 3 எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாஜக சார்பில் அதன் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த பல்வந்த்சிங் ராஜ்புத் ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர்.
3 இடங்களுக்கு 4 பேர் போட்டியிடுவதால் பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அகமது பட்டேலை தோற்கடிக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 2 பேர் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக தெரிவித்ததால் பாஜக தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸ் அளித்த புகாரையடுத்து அவ்விரு எம்எல்ஏக்கள் வாக்குகள் செல்லாது என அறிவித்தது தேர்தல் ஆணையம்.
முன்னதாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டு விசாரணையை நடத்தியது தேர்தல் ஆணையம். இதன்பிறகு நள்ளிரவு 12 மணியளவில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது.
இந்த நிலையில், மற்றொரு திருப்பமாக காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேலுக்கு வாக்களித்ததாக பாஜக எம்எல்ஏ நளின் கொட்டாடியா பேட்டியளித்தார். இதனால் அகமது பட்டேலுக்கு வெற்றி வாய்ப்பு கூடியது.
இதையடுத்து பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. எனவே நள்ளிரவு 1.20 மணியளவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்களின் கள்ள ஓட்டுக்கள் காரணமாக, வாக்கு எண்ணிக்கை இருமுறை தடைபட்டது. அல்லது தேர்தல் ரிசல்ட் செவ்வாய்க்கிழமை இரவுக்குள் வெளியாகியிருக்கும்.