69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கு: 11 பேருக்கு ஆயுள் தண்டனை; 12 பேருக்கு 7 ஆண்டு சிறை!!
அகமதாபாத்: குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் 12 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஒரு குற்றவாளிக்கு 10 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் ஆயிரக்கணக்கில் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
29 பங்களாக்கள், 10 அடுக்குமாடி குடியிருப்புகளில் நுழைந்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரியும் ஒருவர்.
5 பேர் மரணம்
இதுதொடர்பான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர், ஒருவரைக் காணவில்லை.
24 பேர் குற்றவாளிகள்
338 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு 6 ஆண்டுகள் விசாரணை நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த 2-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 60 பேரில் 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுவிக்கப்பட்டோரில் பாஜக கவுன்சிலர் பிபின் படேல், போலீஸ் இன்ஸ்பெக்டர் எர்டா, விஹெச்பி தலைவர் அதுல் வைத்யாவும் அடங்குவர்.
அடுத்தடுத்து ஒத்திவைப்பு
இவர்களுக்கான தண்டனை விவரம் கடந்த 6-ந் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தண்டனை விவரத்தை கடந்த 9, 11 மற்றும் 13 தேதிகளில் அடுத்தடுத்து ஒத்திவைத்தது நீதிமன்றம்.
இன்று தண்டனை அறிவிப்பு
பின்னர் 4-வது முறையாக ஜூன் 17-ந் தேதியான இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என ஒத்தி வைக்கப்பட்டது. இன்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை; 12 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத் தண்டனை; ஒருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.