69 பேர் கொல்லப்பட்ட குல்பர்க் சொசைட்டி வழக்கு: 24 பேருக்கான தண்டனை விவரம் 4-வது முறையாக ஒத்திவைப்பு
அகமதாபாத்: குஜராத்தின் குல்பர்க் சொசைட்டி பகுதியில் 69 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 24 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை அகமதாபாத் நீதிமன்றம் 4-வது முறையாக ஒத்திவைத்துள்ளது. வரும் 17-ந் தேதி குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. அப்போது குல்பர்க் சொசைட்டி குடியிருப்புக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தியது.
இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஈசான் ஜாப்ரி உட்பட 69 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பான வழக்கு அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் 66 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் விசாரணை காலத்தில் 5 பேர் இறந்துவிட்டனர், ஒருவரைக் காணவில்லை.
இந்த வழக்கில் கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 60 பேரில் 36 பேர் விடுவிக்கப்பட்டனர். 24 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இவர்களுக்கான தண்டனை விவரம் 6-ந் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது. ஆனால் தண்டனை விவரத்தை கடந்த 9, 11, 13 தேதிகளில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டன. தற்போது 4-வது முறையாக ஜூன் 17-ந் தேதிக்கு தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.