கேரளா எல்லையில் மாவோயிஸ்டுகளுடன் போலீஸ் பயங்கர துப்பாக்கி சண்டை!
பாலக்காடு: கேரளா- தமிழக எல்லையில் தேடுதல் நடவடிக்கையின் போது மாவோயிஸ்டுகளுக்கும் கேரளா போலீசாருக்கும் இடையே நேற்று 2 மணிநேர பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்றும் அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக- கேரளா எல்லையில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ள செல்லும் கேரளா போலீசார் மீது மாவோயிஸ்டுகள் துப்பாகிச் சூடு நடத்துவதும் அதைத் தொடர்ந்து இருதரப்புக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதும் தொடர் நிகழ்வாகி வருகிறது.
இதனிடையே கேரளாவின் அமைதிப் பள்ளதாக்கு அருகே உள்ள அம்பலப்பார பகுதியில் மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்கான தண்டர்போல்ட் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர். நேற்று மாலை 6.30 மணியளவில் திடீரென அதிரடிப்படையினர் மீது மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் .இதற்கு அதிரடிப்படையினரும் பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே 2 மணிநேரம் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.
இதில் போலீசார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து இன்றும் அப்பகுதியில் அதிரடிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.