காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் பங்கேற்க பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் முடிவு!
காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் பங்கேற்க பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் முடிவு!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடி நாளை மறுநாள் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என அம்மாநில முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கித்தான் ஆக வேண்டும்.. திமுகவின் முரசொலி வலியுறுத்தல்
வீட்டு சிறையில் தலைவர்கள்
அத்துடன் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த தலைவர்கல் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னரே படிப்படியாக இந்த தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
6 கட்சிகளின் கூட்டணி
மத்திய பாஜக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிராக தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, இடதுசாரிகள் என ஆறு பிரதான கட்சிகளை உள்ளடக்கிய குப்கர் பிரகடனத்துக்கான மக்கள் கூட்டணி உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
பிரதமர் மோடி ஆலோசனை
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பாக பிரதமர் மோடி நாளை மறுநாள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சில கட்சிகள் பங்கேற்க முடிவு செய்திருந்தன.
இன்று 6 கட்சிகள் ஆலோசனை கூட்டம்
இந்த நிலையில் பிரதமர் மோடியின் கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது தொடர்பாக 6 பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஶ்ரீநகரில் கூடி ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவில் பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட் குப்கர் மக்கள் கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடி கூட்டியுள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து
பிரதமர் மோடி கூட்டும் கூட்டத்தில் பாஜக அல்லாத பெரும்பாலான கட்சிகளின் தலைவர், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தக் கூடும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி இந்த கோரிக்கையை வெளிப்படையாக வைத்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கிய பின்னரே சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்பது அம்மாநில அரசியல் கட்சிகளின் கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.