குர்கான் நகரை "குருகிராம்" என பெயர் மாற்றியது ஹரியானா அரசு
குர்கான்: மகாபாரத இதிகாசத்தின் அடிப்படையில், "குர்கான்' நகரின் பெயரை "குருகிராம்' என அம்மாநில அரசு மாற்றியுள்ளது.
ஹரியானா மாநிலத்தின் இரண்டாவது தலைநகராக "குர்கான்' திகழ்ந்து வருகிறது. இங்கு பல்வேறு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன. ஹரியானாவின் சிறந்த தொழில் நகரமாகவும் விளங்குகிறது. தலைநகர் டெல்லிக்கு மிக அருகாமையில் உள்ளது குர்கான்.
இந்த நிலையில் குர்கான் நகரின் பெயரை "குருகிராம்' என மாற்ற வேண்டும் என யோகா குரு பாபா ராம்தேவ் உள்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இது தொடர்பாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டர் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் குர்கான் பெயரை "குருகிராம்' எனவும், மேவாட் மாவட்டத்தின் பெயரை "நூஹ்' என மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதன்படி, ஆதி பெயரான குரு கிராம் என்பதையே, புதிய பெயராக சூட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, குர்கான் மாவட்ட இணையதள பக்கத்தில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் ஏன்?: மகாபாரத இதிகாசத்தில் குரு துரோனாச்சாரியார், தனது மாணவர்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்த இடம் என்பதால், குர்கான் நகரம் பழங்காலத்தில் "குருகிராம்' என அழைக்கப்பட்டது. இந்தப் பெயரே நாளடைவில் "குர்கான்' என அழைக்கப்பட்டது. இந்த நிலையில் பாரம்பரியமாக அழைக்கப்பட்டு வந்த குருகிராம் பெயரே குர்கானுக்கு வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
இதேபோல ஜாட் முஸ்லிம்கள் எனப்படும் சமுதாயத்தினர் பெரும்பான்மையாக வசித்து வரும் "மேவாட்' மாவட்டத்தின் பெயரும் பழங்காலத்தில் "நூஹ்' என அழைக்கப்பட்டது. இந்த இரு நகரங்களின் பெயரும் மீண்டும் பழையபடியே மாற்றியமைக்கப்படுகிறது.